Header Ads



உயிர்பலி எடுக்கும் பிரசங்கம் - நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்


-அததெரண-


மூடநம்பிக்கை கருத்துகளை சமூகமயமாக்கி தற்கொலையை ஊக்குவிக்கும் வக்கிரமான மனநிலை கொண்ட குழு பற்றி சர்ச்சைக்குரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.


அண்மையில் மலபேயில் சயனைட் போன்ற விஷத்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட இளைஞனும், யுவதியும் அவ்வாறே தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதற்கு முன்னர் தற்கொலை செய்துக்கொண்ட அந்த குடும்பத்தின் தலைவரான பௌத்த மதத்தைத் திரிப்படுத்தி பிரசங்கம் செய்ததாகக் கூறப்படும் நபரின் பிரசங்கங்களிலும் அவர்கள் கலந்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ருவான் பிரசன்ன குணரத்ன என்ற 47 வயதுடைய நபர் பௌத்த மதத்தை திரிபுப்படுத்தி பல இடங்களில் பிரசங்கம் செய்துள்ளார்.


அந்த பிரசங்கங்களில், தற்கொலை செய்து கொள்வதன் மூலம் அடுத்த ஜென்மத்திற்கு விரைவாகச் செல்ல முடியும் என்று கூறியிருந்தார்.


குறித்த நபர் ஒரு ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்துள்ளதுடன், பின்னர் அவர் அதை விட்டுவிட்டு பல்வேறு பகுதிகளில் இவ்வாறு பிரசங்கம் செய்து வந்துள்ளார்.


இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த நபர் கடந்த 28ஆம் திகதி ஹோமாகமவிலுள்ள வாடகை வீட்டில் சயனைட் போன்ற விஷத்தை உண்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.


அவரது இறுதிச் சடங்கு நாளன்று அதாவது கடந்த டிசம்பர் 30-ம் திகதிஅவரது மனைவி மூன்று பிள்ளைகளுடன் ஒரே மாதிரியான விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதன்படி, இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மாலபே பொலிஸார் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த பிரீத்தி குமார என்ற 34 வயதுடைய நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.


கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பெண்ணின் கணவரின் பிரசங்கத்தில் கலந்து கொண்டதாகவும், அதனால் தான் இறுதிச் சடங்குக்காக வந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.


அந்த பிரசங்கத்தில் தற்கொலையை ஊக்குவிக்கும் வகையில் பிரசாரம் செய்யப்பட்டதாகவும் அந்த நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.


இவ்வாறானதொரு பின்னணியில் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய 34 வயதுடைய பிரீத்தி குமார இன்று மஹரகமவில் உள்ள விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


நேற்று மதியம் 1:30 மணியளவில் அதேபோன்ற விஷத்தினை உட்கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த நபர் தற்கொலை செய்து கொள்ள பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் விஷத்தின் மீதம் அறையில் இருந்த மேசையில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.


இவர் பௌத்த மதத்தை திரிபுபடுத்தி பிரசாரம் செய்த 47 வயதுடைய ருவான் பிரசன்ன குணரத்னவின் நெருங்கிய உறவினர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இதேவேளை, தற்கொலை செய்து கொண்ட நபருடன் மாலபே பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் உட்பட மூன்று பிள்ளைகளின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 21 வயதுடைய மற்றுமொரு யுவதியும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


யக்கல ரஃபல்வத்த பகுதியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த யுவதி ருஹுனு பல்கலைக்கழகத்தில் பௌதீகவியல் பிரிவில் பிரவேசிப்பதற்கு தகுதி பெற்றிருந்தார் எனவும் குறிப்பிடப்படுகிறது.


பௌத்த மதத்தை திரிபுபடுத்தி பிரசங்கம் செய்த ருவான் பிரசன்ன குணரத்ன என்ற நபரின் பிரசங்கங்களிலும் அந்த யுவதி கலந்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும் அந்தந்த தற்கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட சயனைட் வகை விஷப் பொடியும் ஒன்றா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதேவேளை, குறித்த நபரின் பிரசங்கங்களில் கலந்து கொண்ட குழுவினர் இன்று பிற்பகல் மாலபே பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.


மேலும், அவரது பிரசங்கங்களில் பங்கேற்றவர்களுக்கு சயனைடு போன்ற விஷம் கொடுக்கப்பட்டதா என பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.


ஆய்வு கூடத்தில் பணிபுரியும் போது அவர் சயனைட் தயாரித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மேலும் சம்பந்தப்பட்ட நபருடன் தொடர்புடையர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பௌத்தத்தை சிதைக்கும் இவ்வாறான தவறான செய்திகளுக்கு ஏமாறாமல், இவ்வாறான மதவாதங்களை நிராகரிப்பது அறிவார்ந்த பொது மக்களின் பொறுப்பாகும்.

1 comment:

  1. இது மிகவும் மோசமான நிலைமையாகும். எந்த ஒரு சமயமும் தற்கொலையைத்தூண்டவில்லை. தற்கொலை செய்வது மிகப் பெரிய பாவம் அவர்களுக்கு சுவனம் ஹராமாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சுவனம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என அல்குர்ஆன் கூறுகின்றது. மக்களுக்கும் நாட்டுக்கும் மிகவும் ஆபத்தான இந்த கருத்துடையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு புணர்வாழ்வளிக்கவும் அவர்களை நெறிப்படுத்தவும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனைய பொதுமக்களின் தேவைகளில் அரசாங்கம் அசிரத்தை காட்டுவது போல் இந்த விடயத்திலும் அசிரத்தையாக நடந்து கொள்ளாமல் இந்த பாவச் செயலை உடனடியாகத் தடை செய்ய உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் காலம் தாழ்த்தாது உடனடடியாகச் செயல்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.