Header Ads



பேஸ்புக் மூலம் இளம் பெண்களை வேட்டையாடியவன் கைது


பேஸ்புக் மூலம் குறைந்த விலையில் 'ஐபோன்' தருவதாக கூறி இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.


அதன்படி, வேறு ஒரு இளம்பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் பெயரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி முகநூல் கணக்கு மூலம் குறித்த நபர் சம்பந்தப்பட்ட இளம்பெண்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. 


​பின்னர், மொடலிங் போட்டியொன்றில் வெற்றி பெற்றால், 'ஐபோன்' கைப்பேசி  இலவசமாக வழங்கப்படும் என்றும்  குறித்த நபர் அப் பெண்களிடம் கூறியுள்ளார்.


அதன் பின்னர் சந்தேக நபர் இளம் பெண்களிடம் அவர்களின் அரை நிர்வாண புகைப்படங்களை பெற்று அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.


பணம் தராத யுவதிகளை குருநாகல் பகுதிக்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்ததையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.


பின்னர், முகநூல் நிறுவனத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொண்ட விசாரணை அதிகாரிகள் பொலன்னறுவை பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.


அத்துடன், அவர் பணப் பரிமாற்றம் செய்த வங்கிக் கணக்கின் உரிமையாளரும் தம்புள்ளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபர்கள் இருவரும் 22 மற்றும் 20 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சந்தேக நபருடன் பாடசாலை வயது மாணவிகளும் தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

No comments

Powered by Blogger.