Header Ads



உகண்டாவில் ரவூப் ஹக்கீம், சபாநாயகரும் பங்கேற்பு


உகண்டாவில் பொதுநலவாய மாநாட்டில் சபாநாயகருடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பங்கேற்பு


உகண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெற்றுவரும் பொதுநலவாய(Commonwealth)  நாடுகளின் சபாநாயகர்களுக்கும், பாராளுமன்ற அமர்வுகளுக்கு தலைமை  தாங்குவோருக்குமான மாநாட்டில் (CSPOC)கலந்து கொள்ளும் இலங்கைத் தூதுக்குழுவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


கம்பாலாவின்  முனியொன்யோ தளத்தில்  அமைந்துள்ள பிரமாண்டமான மண்டபத்தில் வியாழக்கிழமை(3) இந்த மாநாடு ஆரம்பமாகியது.அதனோடு இணைந்ததாக  செயலமர்வுகளும் இடம்பெறுகின்றன. 


இதில் பங்குபற்றும்  இலங்கைத் தூதுக் குழுவினர்  எண்டபே சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தபோது அவர்களுக்கு அங்கு  வரவேற்பளிக்கப்பட்டது.


 பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வைக்கும் 73 நாடுகளில் 43 நாடுகளின் பிரதிநிதிகள் இக்கருத்தரங்கில் பங்குபற்றுவதாக முன்னரே அறிவித்திருந்தனர்.


 பொதுநலவாய நாடுகளுக்கு மத்தியில் நிலவிவரும் ஒத்துழைப்பையும், புரிந்துணர்வையும் வலுப்படுத்துவதும் ,பாராளுமன்றச் செயற்பாடுகளை மேலும் வினைத்திறன் உள்ளவையாக ஆக்குவது பற்றி ஆராய்வதும் இந்த மாநாட்டின் பிரதானமான நோக்கங்களாகும்.


 பொது நலவாய நாடுகளின் பிரஸ்தாப மாநாட்டில்   (CSPOC)பங்குபற்றும் இலங்கைப் பிரதிநிதிகளில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ,1994ஆம்  ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகள்  குழுக்களின் பிரதித் தலைவராக பதவி வகித்து, பாராளுமன்ற அமர்வுகளுக்குத் தலைமை தாங்கியிருக்கின்றார்.

No comments

Powered by Blogger.