வெட்கமில்லையா..?
ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு 2000 இலட்சம் ரூபாவினை மேலதிகமாக ஒதுக்குவதன் காரணம் என்ன என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12.01.2024) இடம்பெற்ற அமர்வின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிதி ஒழுக்கத்தை பற்றி பேசும் ஜனாதிபதி முதலில் நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அரசியல்வாதிகள் சுகபோகமாக வாழ்வதற்காகவே வரி அறவிடப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எப்படி அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ முடியும். நாமல் ராஜபக்ச அரச இல்லத்தில் வாழ்கிறார். அவரது தந்தை,சித்தப்பா உட்பட குடும்பமும் அரச இல்லத்தில் வாழ்கிறார்கள்.வெட்கமில்லையா ?
நாமலுக்கு எவ்வாறு அரச இல்லம் வழங்க முடியும்.முடிந்தால் நாடாளுமன்றத்தில் குறிப்பிடுங்கள்.
கப்பலில் களியாட்டம் நடத்தியமை தற்போது பேசுபொருளாக உள்ளது. பகலில் 20 மீற்றர் தூரம் கூட தெரியாதவர்கள் துறைமுகத்தை பார்வையிட சென்றார்களாம். அதுவும் இரவில் யாரை ஏமாற்றுகின்றீர்கள்.
நாட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் வகையில் வரியை அதிகரித்து விட்டு அரச நிதியை மோசடி செய்கின்றீர்கள்.
2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு நேர்ந்தது என்ன, ஏன் மேலதிகமாக 2000 இலட்சம் ரூபா குறை நிரப்பு பிரேரணை ஊடாக கோரப்படுகின்றது என்பதை நாடாளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இந்த கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment