Header Ads



15 வயது மாணவி கூட்டு பாலியல் வல்லுறவு - மூவருக்கு விளக்க மறியல்


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


மட்டு ஆரையம்பதியை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவியை கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டின்  பேரில் கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார்.


குறித்த கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 3 பேரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்ததாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ எம் எஸ் ஏ ரஹீம் தெரிவித்தார்.


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில்  15 வயது பாடசாலை மாணவியான சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 3 இளைஞர்களையே நேற்று (07) காத்தான்குடி பொலிஸார் கைது  செய்தனர்.


சம்பவதினமான நேற்று முன்தினம் (06) 15 வயதும் 7 மாதங்களும் கொண்ட சிறுமியை 26 வயதுடைய நபரொருவர் வீடு ஒன்றிற்கு வரவழைத்துள்ளார்.


பின்னர், குறித்த நபரின் நண்பர்கள் இருவர் உட்பட 3 பேர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.


இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.


பின்னர், பொலிஸில் சிறுமியின் தந்தை யால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவத்தில் 26 மற்றும் 32 வயதுக்கிடைப்பட்ட மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.


பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர் படுத்தியபோது விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி போலிசார் தெரிவித்தனர்.


அன்றைய தினம் சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.