Header Ads



கரை ஒதுங்கிய மர்மப் பொருள்


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரை வியாழக்கிழமை(28.12.2023) காலை ஒதுங்கியுள்ள நிலையில் அம்மர்மப்பொருள் கடல் அலைகளினால் அள்ளுண்டு கல்முனை கடற்பிரதேசப் பக்கம் சென்று விட்டதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தெரிவித்தார்.


கோட்டை கல்லாறு கடலில் புதன்கிழமை மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர். இந்நிலையில் அப்பொருள் வியாழக்கிழமை காலை கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றர்.


இந்நிலையில் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள பொருள் என்ன என்பது தமக்குத் தெரியாது, இப்பொருள் தொடற்சியாக இவ்விடத்திலேயே இருக்குமாக இருந்தால் தமது மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக அமையும் எனவே இதனை சம்மந்தப்பட்டவர்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனை களுவாஞ்சிகுடி பொலிசாரும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


இப்பொருள் சிவப்பு நிறத்தில் கூம்பக வடிவில் போத்தல் போன்று பெரியதாக அமைந்துள்ளதுடன் பொருளின் மேற்பகுதியில பி.எம்.ரி. எனவும் பின்பக்கம் பி என்ற எழுத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. குறித்த பொருளில் ஒருபக்கம் சிறிய ரக ரயர் ஒன்று பொருத்தப்பட்டு அதில் இரும்பிலான சங்கிலியும் பொருத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் இம்மர்ம பொருள் அலைகளினால் அள்ளுண்டு கல்முனை கடற்பிரதேசப் பக்கம் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.