Header Ads



மத்ரஸா மாணவன் மரணம் - கண்ணீர் மல்க தந்தை கூறிய விடயங்கள்


பாறுக் ஷிஹான் -


மர்மமான முறையில்  உயிரிழந்த  மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.


இன்று (6) மாணவன் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்ட மத்ரஸா எனும் பாடசாலைக்கு அம்பாறை சிறப்பு தடயவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அதனை தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம்  கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீனின்  விசாரணைக்கு பின்னர் குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் குறிப்பிட்டதை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.


இதே வேளை நேற்று இரவு கைதான குர்ஆன் மத்ரஸா நிர்வாகி பாதுகாப்பாக சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் புலன் விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.


அத்துடன் குடும்பத்தில்  மூத்தவரனான எனது மகன் கடந்த ஒக்டோபர் மாதம்  14 ஆம் திகதி குறித்த மத்ரஸாவில்  இணைந்ததாகவும் அவருக்கு  மாதம் ஒருமுறை 10 ஆயிரம் செலுத்தியதாகவும் இணைப்பு கட்டணமாக ருபா 25 ஆயிரம் செலுத்தியதாகவும்     2 மாதம் கூட  இன்னும் ஆகவில்லை  மௌலவி தொலைபேசி ஊடாக மகனின் சடலத்தை காண்பதாகவும் கண்ணீர் மல்க சிறுவனின் தந்தையார் குறிப்பிட்டார்.


செய்தியின் பின்னணி


13 வயது சிறுவன் சடலமாக மீட்பு-குர்ஆன் மதரஸா நிர்வாகி கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்


13 வயது மாணவன்   தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில் இன்று(5) இரவு  மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பகுதியை  சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த   மாணவனே தூக்கில் தொங்கி  உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.


மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர் உறவினர்கள் தூக்கில் தொங்குவதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும் ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.


இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி  சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.


மேலும் குறித்த மாணவனின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது    தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை  மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில்  சாய்ந்தமருது பொலிஸாரால்   மதரஸா  நிர்வாகியாகிய மௌலவி  கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.


இது தவிர குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தற்கொலையல்ல  என  கூறி    பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


இதே வேளை அம்பாறை மாவட்டம்  கல்முனை தலைமையக   பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 15 வயது  சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் கடந்த சனிக்கிழமை(2)  அன்று  சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸாரால்  கைது செய்யப்பட்டு பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

1 comment:

  1. இந்த மாணவனுக்கு எற்பட்ட துயரில் நாமும் மனமிறங்கி கலந்துகொள்கின்றோம். எமது ஆழ்ந்த அனுதாபத்கை அவருடைய தாய் தகப்பன் சகோதரர்கள், சகோதரிகளுக்கும் நெருங்கிய உறவினருக்கும் தெரிவித்துக்கொள்வ தோடு இதுபோன்ற துயரான சம்பவங்கள் இனியும் கேள்விப்படக் கூடாது.எனவே அதற்கான காரணம் என்ன, அந்த மாணவனின் நடத்தை எவ்வாறு இருந்த து. இந்த மோசமான தீர்மானம் எடுத்த அவரைத் தூண்டிய விடயம் என்ன? அவருடன் நெருங்கிப் பழகும் அவருடைய நண்பர்களின் மனநிலை எவ்வாறு இருக்கின்றது. அவர்களிடமிருந்து ஏதாவது தூண்டுதல்கள் இவருக்கு வழங்கப்பட்டதாபோன்ற விடயங்களையும் அந்த மாணவன் மரதஸாவில் படிப்பது, ஓதுவதில் எப்படி நடந்துகொணடான், ஆசிரியர்களிடமிருந்து அந்த மாணவனுக்கு அழுத்தங்கள், இருந்த தா போன்ற பல விடயங்களை மிக ஆழமாக ஆய்வுசெய்து அவர் எடுத்த மோசமான தீர்மானத்துக்கு காரணம் என்ன என்பதை கண்டு பிடித்து அத்தகைய காரணிகள் முற்றாக அந்த மதரஸாவிலிருந்து அகற்றவேண்டும். அவ்வாறு செய்யாது மனம்போனபோக்கில் இருந்தால் இது போன்ற மரணங்கள் தொடரும் என்பதையும் இங்கு தெரிவிக்க விரும்புகின்றோம். இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளும் நிறுவனங்கள், தனிநபர்களை அணுகி அதற்கு ஆலோசனையும் அதற்கான உதவியையும் பெற்றுக்கொள்ளவேண்டும். என்ன காரணம் கொண்டும் இந்த விடயத்தில் அசிரத்தையாக இருந்து விடவேண்டாம்

    ReplyDelete

Powered by Blogger.