Header Ads



புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவரின் சத்திர சிகிச்சைக்காக வைப்பிலிடப்பட்டிருந்த 38 இலட்சம் ரூபா மோசடி


புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர் ஒருவரின் சத்திர சிகிச்சைக்காக வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டிருந்த 38 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக 3 தனியார் வங்கிகளிடமிருந்து அறிக்கை கோருவதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று அனுமதியளித்துள்ளார்.


இது தொடர்பான விசாரணைகளுக்காக சந்தேகநபர்களுக்குச் சொந்தமான, மூன்று தனியார் வங்கிகளிலுள்ள கணக்கு தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ள உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவரும்  சிலாபம் – மஹவெவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே  நீண்ட காலமாக இடம்பெற்று வந்த இந்த மோசடியினால் பாதிக்கப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதன்போது, அவர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


அதேநேரம் புற்று நோயாளர்களின் வங்கிகளில் நன்கொடையாளர்களால் வரவு வைக்கப்பட்ட உதவித் தொகையை மோசடியாக பெற்றமை தொடர்பாக கணினி குற்ற விசாரணைப் பிரிவுக்கு இதுவரை 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், சுமார் இரண்டரை கோடி ரூபா இந்த சந்தேகநபர்களால் மோசடியாகப் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


புற்று நோயாளர்களின் நோயைக் குணப்படுத்துமாறு இணையத்தளத்தில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த சந்தேகநபர்கள், புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்கு இலக்கங்கள், தேசிய அடையாள அட்டை இலக்கங்கள், தொலைபேசி இலக்கங்கள் போன்றவற்றை பெற்றுள்ளனர். சந்தேகநபர்கள் அந்த ஆவணங்களைப் பயன்படுத்தி அந்த நோயாளிகளின் பெயரில் தனியார் தொலைபேசி நிறுவனங்களிடமிருந்து சிம் அட்டைகளை பெற்றுள்ளனர்.


சிம் அட்டையின் தரவுகள் ஊடாக புற்றுநோயாளிகளின் கணக்குகளை அணுகி, அந்த கணக்குகளில் உள்ள பணத்தை மோசடியான முறையில் பெற்றுக் கொண்டுள்ளதாக கணினி குற்ற விசாரணை பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.