Header Ads



இங்கிலாந்து குடியுரிமை பெற்ற 18 வயது இளைஞனால், 83 வயது மூதாட்டி கொலை


மொரட்டுவை, கீழ் இந்திபெத்த பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண்ணொருவரை 18 வயதான இளைஞன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இரத்த தானம் வழங்கும் நிகழ்விற்காக சேகரிக்கப்பட்ட பணத்தை திருடுவதற்காக 83 வயது பெண் சமூக சேவகர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.


பெண் ஒருவர் தலையில் தாக்கப்பட்டதன் காரணமாக அவரது வீட்டின் அறையில் இரத்தம் கசிந்து உயிரிழந்துள்ளதாக கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி மொரட்டுமுல்லை பொலிஸாருக்கு அப்பகுதி மக்களிடமிருந்து தகவல் கிடைத்தது.


இதனடிப்படையில், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் அமில கோவின்ன தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.


மேலும் அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் இங்கிலாந்து குடியுரிமை பெற்ற சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இளைஞர் மற்றும் அவரது பாட்டியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.


இதன்போது, குறித்த இளைஞன் கடந்த 27ஆம் திகதி இரண்டு தடவைகள் உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு தனது பாட்டியுடன் தவறவிடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவும் கையடக்க தொலைபேசியின் பழுதை சரிசெய்வதற்காகவும் சென்றதாக தெரிவித்தார். ஆனால் ஒரு முறை தான் அந்த வீட்டிற்கு சென்றதாக பாட்டி கூறியுள்ளார்.


இதன்படி, சந்தேகத்தின் அடிப்படையில் 18 வயதுடைய இளைஞனைக் கைது செய்து விசாரணைக்குட்படுத்திய போது, ​​சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார்.


பாட்டியுடன் வீட்டுக்குச் சென்றபோது, ​​மேசையில் இருந்த பணப்பையில் 5,000 ரூபாய் நோட்டுகள் இருப்பதைக் கண்டதாகவும், மறுநாள் சமையலறையிலிருந்து வீட்டிற்குச் சென்று பெண்ணிடம் தண்ணீர் கேட்டதாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். 


தண்ணீர் குவளையை எடுத்து வரச் சென்றபோது, ​​அந்த இளைஞன் தனது காற்சட்டை பையில் சில பணத்தாளினை வைத்து கொண்டிருப்பதை அந்த வீட்டுப் பெண் பார்த்துள்ளார்.


இரத்த தானத்திற்காக உள்ளூர்வாசிகளிடமிருந்து உரிய பணம் சேகரிக்கப்பட்டதாகவும், சம்பவம் குறித்து பாட்டியிடம் தெரிவிப்பதாகவும் அந்தப் பெண் அந்த இளைஞனிடம் கூறியுள்ளார்.


அப்போது இளைஞன், அந்தப் பெண்ணை தள்ளிவிட்டதால் சுவரில் மோதி தரையில் விழுந்தார்.


பின்னர் சமையல் அறைக்கு ஓடிச்சென்று அலவாங்கினை எடுத்து வந்து அந்த பெண்ணின் தலையில் இரண்டு முறை தாக்கியதாக சந்தேகநபரான இளைஞன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.


அதன் பின்னர் அலவாங்கினை கழுவி சுத்தம் செய்து, அந்த பெண்ணின் கையடக்க தொலைபேசியை எடுத்துக்கொண்டு சந்தேநபர் வீட்டுக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பின்னர் சந்தேகநபர் மொரட்டுவையில் உள்ள கையடக்கத் தொலைபேசி கடையொன்றில் அந்த கையடக்கத் தொலைபேசியை மாற்றிக் கொண்டு திருடப்பட்ட பணத்தில் உடற்கட்டமைப்புக்கு தேவையான விட்டமின்களை வாங்கியுள்ளார்.


எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உடற்கட்டமைப்பு போட்டியில் கலந்துகொள்ள சந்தேகநபரான இளைஞர் தயாராக இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.