Header Ads



சவூதியில் உள்ள, இலங்கைப் பெண்ணின் கதறல்


சவூதி அரேபியாவில் வீட்டு வேலைக்குச் சென்ற இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரை அவர் வேலை செய்த வீட்டின் உரிமையாளர் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


கொத்தடுவ புதிய நகரில் வசித்து வந்த 45 வயதுடைய நயனா தில்ருக்ஷி என்ற பெண்ணே இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.


சுமார் 7 மாதங்களுக்கு முன்பு இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.


சவூதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், பின்னர் சவுதி பொலிசாரின் தலையீட்டில் தான் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.


கடும் சிரமங்களுக்கு மத்தியில் சுமார் ஒன்றரை மாதங்களாக தடுப்பு முகாமில் வாழ்ந்து வருவதால், தம்மை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மன்றாடியுள்ளார்.


நயனா தில்ருக்ஷி கடந்த பெப்ரவரி மாதம் மாதம் 8ஆம் திகதி குருநாகலில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஆதரவுடன் சவூதி அரேபியாவிற்கு வெளிநாட்டு வேலைக்காக சென்றுள்ளார்.


அவர் அந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு மற்றொரு பெண் மூலம் பரிந்துரைக்கப்பட்டார்.


நயனா தில்ருக்ஷி சவுதி அரேபியாவில் 3 மாடிகள் கொண்ட வீட்டில் பணிபுரிந்துள்ளார்.


வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் அவர் செய்திருந்ததுடன், வீட்டில் உள்ள சிறு குழந்தைகளை கவனித்துக் கொள்ளுமாறும் பணிக்கப்பட்டுள்ளார்.


இவ்வாறு வேலை செய்து கொண்டிருந்த போது, ​​கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி வீட்டு உரிமையாளரும், அவரது மனைவியும், குழந்தைக்கு சரியாகச் சாப்பாடு கொடுக்கவில்லை எனக் கூறி தாக்கியுள்ளனர்.


இதையடுத்து அந்த பெண்ணின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.


அவர் அதிலிருந்து தப்பிக்க அலறியும்  பலனில்லை.


பின்னர், வீட்டின் உரிமையாளர் தீயை அணைத்து, ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


எனினும், நயனா தில்ருக்ஷியே அவரது உடலுக்கு தீ வைத்ததாக அந்த வீட்டின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


அப்படி ஒன்றும் செய்யவில்லை என்றும், அம்மாவை பராமரிக்கவும், வீடு கட்ட வேண்டும் என்பதற்காக தான் வெளிநாட்டு வேலைக்கு சென்றாகவும் அவர் கூறியுள்ளார்.


இது தொடர்பாக, நயனா தில்ருக்ஷியை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பரிந்துரைத்த சம்பந்தப்பட்ட தரகர் பெண்ணிடம் சம்பவம் குறித்து கேட்டபோது, ​​அந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன பெண்களை பரிந்துரைப்பதற்கு மட்டுமே அவர் நியமிக்கப்பட்டதாகவும், அதற்கான பணம் தனக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


அதன் பின்னர் குறித்த பெண்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அறிவித்த போதும் தமக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என நயனா தில்ருக்ஷி தெரிவித்துள்ளார்.


இது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் அந்நாட்டு தூதரகத்துக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.


சில மாதங்களுக்கான சம்பளம் கூட தனக்கு கிடைக்கவில்லை என்றும் நயனா தில்ருக்ஷி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.