Header Ads



ட்ரைபோலி கொலைக் கும்பல் பற்றி, ஜனாதிபதிக்கும் தெரியும் - ஹக்கீம்


கோவிட் பெருந்தொற்று காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் பெயர் விபரங்கள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்திருந்த போதும், ஆவணங்கள் இன்று வரை கிடைக்கப்பெறவில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார்.  


அத்துடன் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் ராஜபக்ச ஆட்சியில் இயங்கி வந்த ட்ரைப்போலி என்ற கொலை கும்பலுக்கு தொடர்பு உள்ளது எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.  


உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் தற்பொழுது சர்ச்சைக்குரிய விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


ராஜபக்ச ஆட்சி காலத்தில் ட்ரைப்போலி என கொலை கும்பல் ஒன்று இயங்கி வந்தது. அரசாங்க அனுசரணையுடன் இந்த கும்பல் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பில் இந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த கொலைகள் தொடர்பில் தற்பொழுது இராஜாங்க அமைச்சர் பதவி ஒன்றை வகிக்கும் முன்னர் ஆயுதக் குழு ஒன்றின் அமைப்பில் செயல்பட்ட பின்னர் எம்முடன் இணைந்து கொண்ட ஒருவர் தொடர்பிலும் பாரதூரமான குற்றச்சாட்டுகள் இந்த ஆவணப்படத்தில் சுமத்தப்பட்டுள்ளது. 


அதுமட்டுமின்றி, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஊடகவியலாளர் லசந்த படுகொலையின் போது நாடாளுமன்றில் ட்ரைபோலி போன்ற ஓர் கும்பலின் செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.


எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. ஜனாதிபதிக்கும் இந்த விடயம் தெரியும் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


அவ்வாறான ஒரு பின்னணியில் எமது புலனாய்வு பிரிவின் பங்கு பற்றலுடன் அல்லது அவர்களது வழிகாட்டலின் கீழ் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்று இருந்தால், சஹரான்களுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கு உதவி இருந்தால் இந்த உயரிய சபையின் வரப்பிரசாதங்களை பயன்படுத்தி எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூற முடியும்  எனவும் ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.