Header Ads



கலைக்கப்பட்டது பாகிஸ்தான் பாராளுமன்றம் - இம்ரான் என்ன செய்யப்போகிறார்..?


பாகிஸ்தானில் நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அறிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தின் பதவி காலம் முடிய 3 நாட்கள் இருந்த நிலையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையில் முன்கூட்டியே நேற்று (09.08.2023) நள்ளிரவில் கலைக்கப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கையானது பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடுமையான நிதி நெருக்கடி ஸ்திரமற்ற அரசியல் சூழல் என தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த 2018 இல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.


இதனால் இம்ரான் கானின் தெஹ்ரீக் இன்சாப் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. பிரதமராக அவர் 4 ஆண்டுகள் இருந்து வந்த நிலையில் அந்த ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த முக்கிய கட்சி ஆதரவை விலக்கிக் கொள்ள அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியுற்று பதவி இழந்தார்.


அதுமட்டுமின்றி மோசடி வழக்கில் இம்ரான் கானுக்கு சில நாட்களுக்கு முன்பு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்த கைது நடவடிக்கையால் இம்ரான் கான் 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. பாகிஸ்தான் பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார்.


இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய 3 நாட்கள் இருந்த நிலையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையில் முன்கூட்டியே நேற்று நள்ளிரவில் கலைக்கப்பட்டது.


பாகிஸ்தானில்  5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றம் பதவிக்காலம் முடிந்து 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும்.


ஆனால் நாடாளுமன்றம் பதவிக்காலம் முடியும் முன்னரே அதனைக் கலைத்தால் 90 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்திக் கொள்ளலாம்.


கூடுதலாக 30 நாட்கள் கிடைக்கும் என்பதாலேயே பிரதமர் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க பரிந்துரைத்தார் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

No comments

Powered by Blogger.