Header Ads



கத்தோலிக்கர்களை குற்றம்சுமத்தி மறவன்புலவு விடுத்துள்ள அறிக்கை


சைவருக்கும் தமிழருக்கும் எதிரான கத்தோலிக்கரின் இன்றைய அட்டூழியமே செபத்தியான் கண்ணகை அம்மன் தெரு என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.


இந்த விடயம் தொடர்பில் நேற்று(13.08.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அவ் அறிக்கையில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


“கண்ணகி எனச் சொல்லாது பத்தினி என்றார் இளங்கோ. உரைசால் பத்தினி எனத் தொடக்கத்திலேயே கூறிய இளங்கோ, காப்பியம் முழுவதும் பல இடங்களில் பத்தினி என்பார். இளங்கோ கூறியது அதே சொல். அதே பொருள். அதே தெய்வ நிலை.


இலங்கையில் ஏறத்தாழ 25,000க்கும் கூடுதலான பத்தினி தெய்வக் கோயில்கள் காணப்படுகின்றன. 


25,000க்கும் கூடுதலான விகாரைகளின் கோயில்களில் பத்தினித் தெய்வத்தை வழிபடுவோர் பௌத்த சிங்களவர். தமிழர் அல்லாத வேறொரு இனக் குழு. தமிழ்ப் பெண்ணான கண்ணகிக்கு இத்தனை கோயில்களை அமைத்து வழிபடும் மரபு உலகில் வேறு எங்கும் இல்லை.


பல நூற்றாண்டு காலப் பத்தினித் தெய்வ வழிபாட்டில் கண்ணகியைப் புத்த கண்ணகி என்றோ, சித்தார்த்த கண்ணகி என்றோ, கௌதம கண்ணகி என்றோ அவர்கள் அழைக்கவில்லை.


இளங்கோ எந்தச் சொல்லால் கண்ணகியை அழைத்தாரோ, அதே சொல்லால் சிங்களவர் ஏறத்தாழ 1800 ஆண்டுகளாகக் கண்ணகியை அழைக்கிறார்கள்.


தமிழ் மரபைப் பௌத்த சிங்களவர் சுமந்து போற்றுகிறார்கள். இன்றைய பௌத்த சிங்களவரின் மிகப்பெரிய கண்டிப் பெருவிழாவில் பத்தினியும் யானை மீது வலம் வருகிறாள்  தெய்வமாக.


நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள், வாள்முனையில் சைவர்களைக் கத்தோலிக்கராக மதமாற்றியவர்கள், கண்ணகியைச் செபத்தியான் கண்ணகி என்கிறார்கள்.


கண்ணகியை பத்தினித் தெய்வமாக இலங்கைக்குக் கொண்டு வந்து புத்தரின் தெய்வமாக்கிய மன்னன் கஜபாகுவை (கிபி 113 135 கால அரசன்) இளங்கோவடிகள், 'கடல் சூழ் இலங்கை கஜபாகு வேந்தன்' என சிறப்பித்துக் கூறுவார்.


கஜபாகுவுக்கு 120 ஆண்டுகளுக்குப் பின் பிறந்தவன் செபத்தியான் (கிபி 233-288). தமிழுக்கும், பத்தினிக்கும், கயவாகுவுக்கும், செபத்தியானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 


உரோமப் பேரரசின் கொடுமையால் இறந்தவன் செபத்தியான்.  செபத்தியானுக்கும் தமிழருக்கும் என்ன உறவு? எதுவுமே இல்லை. தமிழர் மீதான கத்தோலிக்கப் படையெடுப்பின், கத்தோலிக்க ஆக்கிரமிப்பின், கத்தோலிக்க மேலாட்சியின் சின்னமே செபத்தியான்.


செபத்தியானின் பெயர், தமிழ் இலக்கியம் எதிலுமே இல்லை. கத்தோலிக்க ஆக்கிரமிப்பின் அடையாளமாகச் செபத்தியான் கண்ணகை அம்மன் தெரு ஊர்காவற்துறையில் அமைந்திருக்கிறது.


இளங்கோ, கஜபாகு, சேரன் செங்குட்டுவன், புத்தர், சைவர், தமிழர், சிங்களவர், யாவருக்கும் அவமானம் பழிச்சொல் தருகின்ற பெயரே, செபத்தியான் கண்ணகை அம்மன் தெரு.


சைவத் தமிழர், பௌத்த சிங்களவர் ஆகிய இரு சமூகத்தவரையும் திட்டமிட்டு எக்காளிக்க ஏளனமாக்க அவமானிக்கக் கத்தோலிக்கர்கள் செபத்தியான் கண்ணகை அம்மன் தெருவை உருவாக்கி இருக்கிறார்கள்.


1998இல் சிலாவத்துறை பிள்ளையார் கோயில் வளாகத்துள் மரியாள் சிலை வைத்த பாதிரியார் அன்று விடுதலைப் புலிகளின் கையில் சிக்கினார்.


தற்போது அந்த சிலையும் இல்லை. பாதிரியாரும் இல்லை. இன்று விடுதலைப் புலிகளில்லை. எனினும் ஊர்காவற்றுறைக் கத்தோலிக்கப் பாதிரியார் நடவடிக்கை எத்தனை நாளைக்குத் தொடரும்? பார்க்கலாம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.