Header Ads



புலிகள் முஸ்லிம்களுக்கு இழைத்த படுபாதகச் செயல்கள் - இதனைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்..? (படங்கள்)



- யூ.எல். மப்றூக் -


புலிகள் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் - இலங்கை அரசு முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்று, இலங்கை - ஏறாவூர் 'சுஹதாக்கள் பேரவை'யின் தலைவர் எம்.எல். அப்துல் லத்தீப் கோரிக்கை விடுக்கின்றார்.


அதேவேளை, கொலைகள் நடந்த காலப்பகுதியில் அந்தப் பிராந்தியத்துக்குப் பொறுப்பாக இருந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் தற்போது உயிருடன் இருந்தால், அவர்கள் அந்தக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார்.


இலங்கை ஏறாவூரில் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி விடுதலைப் புலிகளால் 121 முஸ்லிம் பொதுமக்கள் ஒரே இரவில் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவுகூரும் நிகழ்வு - கடந்த சனிக்கிழமை ஏறாவூரில் 'சுஹதாக்கள் தினம்' எனும் பெயரில் அனுஷ்டிக்கப்பட்டது.


அந்த சம்பவத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் - 'சுஹதாக்கள் பூங்கா' என அழைக்கப்படுகிறது. ஏறாவூர் நூரானியா பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில், நினைவுக் கட்டடம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் படுகொலையானவர்களின் பெயர்கள் பதிக்கப்பட்டுள்ளன.


”புலிகள் அமைப்பினர் கிழக்கு மாகாணத்திலும் அதனை அண்டிய பிராந்தியங்களிலும் முஸ்லிம் பொதுமக்களை படுகொலை செய்தமை தொடர்பில் - இதுவரை முறையான விசாரணைகள் எதையும் அரசு நடத்தவில்லை. அதனால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட தகவல் சர்வதேசத்தின் கவனத்துக்கு முழுமையாகச் சென்றடையவில்லை. புலிகள் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டு, உடமைகளை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை எவ்வித இழப்பீடுகளும் கிடைக்கவில்லை. எனவேதான் ஓர் ஆணைக்குழுவை அமைத்து, புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்துமாறு வலியுறுத்துகின்றோம்" என, 'சுஹதாக்கள் பேரவை'யின் தலைவர் அப்துல் லத்தீப் பிபிசியிடம் கூறினார். 


புலிகள் அமைப்பு தற்போது அழிக்கப்பட்டு விட்டாலும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை புலிகள் அமைப்பினர் படுகொலை செய்த காலத்தில், அந்த அமைப்புக்குத் தலைமை தாங்கிய, முக்கியஸ்தர்கள், அந்தக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் லத்தீப் வலியுறுத்தினார். ”1990ஆம் ஆண்டு புலிகள் அமைப்பினரால் நூற்றுக்கணக்கில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட போது, அந்த அமைப்பின் கிழக்குப் பிராந்தியத் தளபதியாக கருணா அம்மான் இருந்தார். புலிகள் அமைப்பில் அப்போது இருந்த பிள்ளையானும் தற்போது உயிருடன் இருக்கின்றார். எனவே, அந்தப் படுகொலைகளுக்காக இவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்," எனவும் அவர் கூறினார்.  


கிழக்கு மாகாணம் - காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் 1990 ஆகஸ்ட் 03ஆம் தேதி - இரவு தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது, புலிகள் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களில் சிறுவர்கள் உள்ளடங்கலாக 103 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இதன்போது காயப்பட்ட 21 பேர் பின்னர் மரணித்தனர். இந்தச் சம்பவம் நடந்து 10 நாட்களாகுவதற்குள், ஏறாவூர் முஸ்லிம்கள் மீது - புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 121 பேரை படுகொலை செய்தனர்.


படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக, குறித்த பள்ளிவாசலில் கடந்த சனிக்கிழமை (12ஆம் தேதி) காலை பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது. பின்னர், அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டுச் சென்றோர், அப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பான கோரிக்கைகளை முன்வைத்து, ஏறாவூர் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.


இதன்போது பிபிசி தமிழிடம் பேசிய ஏறாவூர் 'சுஹதாக்கள் பேரவை'யின் தலைவர் எம்.எல். அப்துல் லத்தீப், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் - இலங்கை அரசு முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்கிற கோரிக்கையை முன்வைத்தார்.


ஏறாவூரில் புலிகள் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்பாக - 'சுஹதாக்கள் பேரவை' இயங்கி வருகின்றது.


ஏறாவூர் பிரதேச செயலாளரிடம் 'சுஹதாக்கள் பேரவை'யின் தலைவர் அப்துல் லத்தீப் மகஹஜர் கையளித்தார்.


”புலிகள் அமைப்பினர் கிழக்கு மாகாணத்திலும் அதனை அண்டிய பிராந்தியங்களிலும் முஸ்லிம் பொதுமக்களை படுகொலை செய்தமை தொடர்பில் - இதுவரை முறையான விசாரணைகள் எதையும் அரசு நடத்தவில்லை. அதனால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட தகவல் சர்வதேசத்தின் கவனத்துக்கு முழுமையாகச் சென்றடையவில்லை. புலிகள் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டு, உடமைகளை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை எவ்வித இழப்பீடுகளும் கிடைக்கவில்லை. எனவேதான் ஓர் ஆணைக்குழுவை அமைத்து, புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்துமாறு வலியுறுத்துகின்றோம்" என, 'சுஹதாக்கள் பேரவை'யின் தலைவர் அப்துல் லத்தீப் பிபிசியிடம் கூறினார்.


புலிகள் அமைப்பு தற்போது அழிக்கப்பட்டு விட்டாலும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை புலிகள் அமைப்பினர் படுகொலை செய்த காலத்தில், அந்த அமைப்புக்குத் தலைமை தாங்கிய, முக்கியஸ்தர்கள், அந்தக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் லத்தீப் வலியுறுத்தினார்.


”1990ஆம் ஆண்டு புலிகள் அமைப்பினரால் நூற்றுக்கணக்கில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட போது, அந்த அமைப்பின் கிழக்குப் பிராந்தியத் தளபதியாக கருணா அம்மான் இருந்தார். புலிகள் அமைப்பில் அப்போது இருந்த பிள்ளையானும் தற்போது உயிருடன் இருக்கின்றார். எனவே, அந்தப் படுகொலைகளுக்காக இவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்," எனவும் அவர் கூறினார்.


கிழக்கு மாகாணம் - காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் 1990 ஆகஸ்ட் 03ஆம் தேதி - இரவு தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது, புலிகள் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களில் சிறுவர்கள் உள்ளடங்கலாக 103 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இதன்போது காயப்பட்ட 21 பேர் பின்னர் மரணித்தனர்.


இந்தச் சம்பவம் நடந்து 10 நாட்களாகுவதற்குள், ஏறாவூர் முஸ்லிம்கள் மீது - புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 121 பேரை படுகொலை செய்தனர்.


அந்த படுகொலையின் போது குடும்பத்தில் இருந்த அனைவைரும் கொல்லப்பட்ட நிலையில் எம்.ஐ.எம். நியாஸ் மட்டும் உயிர் தப்பினார்.


அந்தத் தாக்குதலின்போது தனது குடும்பத்தில் தாய், தந்தை ஒரு ஆண் சகோதரர் மற்றும் மூன்று சகோதரிகள் என, அத்தனை பேரையும் இழந்து - தனியாளாக உயிர் தப்பியவர் எம்.ஐ.எம். நியாஸ். அப்போது அவருக்கு 15 வயது. இரத்தம் தோய்ந்த அந்த கோர இரவை பிபிசியிடம் அவர் நினைவுபடுத்திப் பேசினார்.


”அது அச்சம் நிரம்பிய காலமாகவே இருந்தது. ஊரில் அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அன்று பகல் ஏறாவூருக்கு அருகில் செங்கலடியில் வைத்து ராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதன் காரணமாக பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது".


"எங்கள் குடும்பத்தில் தாய், தந்தை, பிள்ளைகள் என மொத்தமாக நாங்கள் 07 பேர் இருந்தோம். வீட்டில் நான்தான் மூத்த பிள்ளை. கடைசித் தங்கைக்கு அப்போது 06 மாதம்தான் ஆகியிருந்தது. சம்பவம் நடந்த தினம் எங்கள் தாய் மற்றும் தந்தையின் குடும்பத்தவர்களும் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தனர். மொத்தமாக அன்று 23 பேர் எங்கள் வீட்டில் இருந்தனர். அப்போது நேரம் இரவு 10 மணியிருக்கும், தூரத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள பள்ளிவாசலில், பாங்கு (அதான்) சொல்லி - ஊருக்குள் அசம்பாவிதம் நடப்பது தொடர்பில் எச்சரிக்கப்பட்டது. அப்போது எனது தந்தையும், சாச்சாவும் (சிறிய தந்தை) என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக வெளியே சென்றார்கள்” என, சம்பவத்தை விவரிக்கத் தொடங்கினார் நியாஸ்.


தாங்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தபோது, வீட்டுக் கதவை யாரோ தட்டியதாக நியாஸ் கூறினார். ஆனால், அதற்கு தாங்கள் பதிலளிக்காமல் சத்தமின்றி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


”வீட்டுக் கதவு இரண்டாவது முறையும் தட்டப்பட்டது. அப்போது 6 மாத குழந்தையான எனது தங்கை சத்தமிட்டார். அது வெளியில் நின்றவர்களுக்கு கேட்டிருக்க வேண்டும். 'ரஞ்சன் வீட்டுக்குள் ஆட்கள் இருக்கிறார்கள்' என்று, வெளியில் யாரோ கூறியது எனக்குக் கேட்டது".


துப்பாக்கி சூடு நடந்த இடம் இது தான் என நியாஸ் காட்டினார்.


”அதனையடுத்து எங்கள் வீட்டின் கதவு ஒன்றை வெளியில் நின்றவர்கள் உடைக்கத் தொடங்கினார்கள். நாங்கள் மற்றொரு கதவைத் திறந்துகொண்டு பக்கத்து வளவுக்குள் நுழைந்தோம். அப்போது எங்களை புலிகள் கண்டு கொண்டனர். அங்கிருந்து துப்பாக்கி முனையில் எங்களை வீதிக்கு அவர்கள் அழைத்து வந்தார்கள். அங்கு வீதியில் இருவர் இறந்து கிடந்ததைத் கண்டோம்” எனக்கூறிய நியாஸ் விசும்பினார், கண்ணீர் வடிந்தது. சற்று நேரம் மௌனமாக இருந்த அவர் பேசத் தொடங்கினார்.


”எனது வாப்பாவும் சாச்சாவுமே வீதியில் இறந்து கிடந்தனர். அப்போது எங்களை அங்கிருந்த மதில் ஓரம் முழங்காலில் குந்தச் சொன்னார்கள். ஒருவர் பக்கம் ஒருவராக நாங்கள் முழங்காலில் இருந்தோம். அவர்கள் அரை வட்ட வடிவில் எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். எனக்கு அருகில் நின்ற புலி உறுப்பினர் ஒருவர், 'நான் சுடட்டுமா' என்று கேட்டார். அதற்குள் எங்களை அங்கிருந்த உயரமான ஒருவர் சுடத் தொடங்கினார். அவர் தாஸ் என அழைக்கப்படும் புலிகளின் உள்ளூர் தலைவர். எனக்கு அருகில் இருந்து எனது சாச்சி (தாயின் தங்கை) மீது குண்டு பாய்ந்ததும் அவர் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். அப்போது நான் மயங்கி விட்டேன். சில மணி நேரம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது” என்றார்..


அந்த சம்பவத்தில் நியாஸின் தாய், தந்தை, நான்கு சகோதரர்கள் என, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் படுகொலையானார்கள். ஆனால் நியாஸ் காயங்களின்றித் தப்பினார். அன்று இரவு அவர் வீட்டில் மொத்தமாக இருந்த 23 பேரில் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.


இந்த சம்பவத்தின் பிறகு, வெளியூரில் இருந்த தனது மாமா வீட்டில் வளர்ந்த நியாஸ், தனது சொந்த ஊரிலேயே திருமணம் முடித்தார். இப்போது அவருக்கு 48 வயதாகிறது. இரண்டு பெண் பிள்ளைகள் அவருக்கு உள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையில் இப்போது நியாஸ் பணியாற்றுகின்றார்.


புலிகளின் துப்பாக்கி சூட்டில் குண்டு காயங்களுடன் உயிர் தப்பிய முஸ்தபா, புலிகளின் துப்பாக்கி சூட்டில் குடும்ப உறுப்பினர்கள் சரிந்து விழுந்ததைக் கண்ணால் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார்.


தாஸ் என்பவரை அடையாளம் கண்டேன்

நியாஸ் தப்பிய அதே இடத்தில், புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து உயிர் பிழைத்தவர்களில் மற்றொருவர் ஐ.எம். முஸ்தபா. இவர் நியாஸுக்கு மச்சான் முறையானவர். அப்போது தனக்கு 12 வயது என்கிறார் முஸ்தபா. புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவரின் தொடை மற்றும் வயிற்றில் காயங்கள் ஏற்பட்டன. அந்த கணங்களை அவர் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.


”எங்களை புலிகள் முழங்காலில் இருக்க வைத்தபோது, எனது தாயாரும், மூத்த சகோதரியும் என்னை அவர்களின் பின்னால் வைத்துக் கொண்டனர். புலிகள் எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதும் அனைவரும் சரிந்து வீழ்ந்தோம். அப்போது என்மீது தோட்டாக்கள் படவில்லை. ஆனாலும் இறந்து விட்டதைப்போல் அசையாமல் கண்களை இறுக மூடிக்கொண்டேன். துப்பாக்கி சூடு நடத்தி முடிந்ததும் ஒருவன் நீளமான ஒரு டாச் லைட்டை அடித்து - யாராவது உயிருடன் இருக்கிறார்களா எனப் பார்த்துக் கொண்டு வந்தான். எனது முகத்துக்கு டாச் லைட்டை அடித்தபோது வெளிச்சத்தின் கூச்சத்தில் எனது இமைகள் அசைந்ததால் - நான் உயிருடன் இருப்பதை தெரிந்து கொண்டார்கள். அப்போது ஒருவன் என்னை காலால் உதைத்தான். பின்னர் சுவரில் சாய்த்து வைத்து, என்னை சுட்டார்கள்” என, முஸ்தபா விவரித்தார்.


அதன்போது முஸ்தபாவின் குடும்பத்தில் அவரின் தாயும் சகோதரியும் கொல்லப்பட்டார்கள்.


அந்த கொலைக்களத்தில் புலிகளின் உள்ளூர் தலைவர்களில் ஒருவரான தாஸ் என்பவரை தான் கண்டதாகவும், அவரை அதற்கு முன்னரும் சில தடவை - தான் பார்த்துள்ளதாகவும் முஸ்தபா தெரிவித்தார்.


”பின்னாளில் களுவன்கேணியில் ராணுவத்தினருடன் நடந்த சண்டையொன்றில் தாஸ் கொல்லப்பட்டார். அவரின் உடல் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த உடலை நான் சென்று பார்த்தேன்” என முஸ்தபா கூறினார்.


வயிற்றில் காயம் - இன்னும் அவதிப்படும் ஜாஹிரா

ஏறாவூர் படுகொலை சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, காயங்களுடன் தப்பியவர்களில் மற்றொருவர் ஜாஹிரா. அவரின் இடுப்புத் தொடைப் பகுதி மற்றும் வயிற்றில் ஏற்பட்ட காயங்களின் பாதிப்புகளினால் அவர் இன்னும் அவதியுறுகிறார். வயிற்றினுள் தோட்டா பாய்ந்ததில் தனது சிறுநீர்பை பாதிப்படைந்து விட்டதாக ஜாஹிரா தெரிவிக்கின்றார். அவருக்கு இப்போது 49 வயதாகிறது. சம்பவம் நடந்த போது சாதாரண தரம் (10ஆம் வகுப்பு) படித்துக் கொண்டிருந்தார்.


தாக்குதல் நடந்த அன்று தனது தாயினுடைய பெற்றோரின் வீட்டில் ஜாஹிரா தங்கிருந்தார். சில நாட்களுக்கு முன்னர் காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது புலிகள் இயக்கத்தினர் தாக்குதல் நடத்தியமையினாலும், சம்பவ தினத்தன்று காலை - புதிய சந்தைப்பகுதியில் குண்டொன்று வெடித்ததாலும் ஊரில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டதாக அவர் கூறினார்.


”எங்கள் மூத்தப்பாவின் (தாயின் தந்தை) வீட்டுக்கு அந்தக் காலத்தில் அடிக்கடி புலிகள் இயக்கத்தினர் வந்து மூத்தப்பாவிடம் துப்பாக்கி முனையில் பணம் கேட்பார்கள், அவரிடமிருந்த 'ட்ராக்டரை' பெற்று, தங்கள் பயன்பாட்டுக்காக புலிகள் கொண்டு செல்வார்கள். சில வேளைகளில் டீசல் கேட்பார்கள். இதனை நான் நேரடியாகக் கண்டுள்ளேன். இதன் காரணமாகவும் புலிகள் எப்போதும் வீட்டுக்கு வரலாம் என்கிற அச்சம் எங்களுக்கு இருந்தது” என்றார்.


”நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது எங்கள் மாமா ஒருவர் வந்து எங்களை எழுப்பி, தூரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்பதாக கூறினார். அதனால் நாங்கள் வீட்டிலிருந்து வெளியேறினோம். ஓலை வேலிகளின் ஊடாக புகுந்து பக்கத்து வீடுகளைக் கடந்து செல்லும் போது, புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான் காயமடைந்தேன்” என ஜாஹிரா கூறினார்.


இந்த சம்பவத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய அவர் ஏறாவூர், மட்டக்களப்பு, பொலநறுவை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் 03 மாதங்கள் சிகிச்சை பெற்றார்.


அன்றைய சம்பவத்தில் ஜாஹிராவின் மூத்தப்பா (தாயின் தந்தை) கொல்லப்பட்டார்.


புலிகள் நடத்திய அந்தத் தாக்குதலில் - மொத்தமாக ஏறாவூரில் 121 பேர் கொல்லப்பட்டனர். வயோதிகர்கள், கைக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்.


முப்பது வருடங்களுக்கும் மேல் நடந்த உள்நாட்டு யுத்தத்தில், தமிழர்களைப் போலவே முஸ்லிம்களும் பெரியளவில் உயிர், உடமைகளை இழந்துள்ளனர் என்கிறார் ஏறாவூர் 'சுஹதாக்கள் பேரவை'யின் தலைவர் எம்.எல். அப்துல் லத்தீப். குறிப்பாக புலிகள் அமைப்பினரால் பெருந்தொகையான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அவர் கூறுகின்றார்.


ஆனால், அவை குறித்து இதுவரையில் முறையான விசாரணைகள் எதனையும் அரசு நடத்தவில்லை எனக் கூறிய அப்துல் லத்தீப், இனியாவது அதனை அரசு செய்ய வேண்டும் என்றார். "அது நடக்கவில்லை என்றால், நாங்களும் சர்வதேசத்தின் உதவியை அதற்காக நாடும் நிலை ஏற்படும்” எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.