Header Ads



முஸ்லிம்கள் பற்றி ஹக்கீம் - உடனடி பதில் வழங்கிய ஜனாதிபதி


வடக்கு, கிழக்கைப் பொறுத்த வரை முஸ்லிம்கள் அங்கு முக்கிய பங்கு வகிப்பதால் முஸ்லிம் உறுப்பினர்களோடு தனியான பேச்சு வார்த்தையொன்றை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஜனாதிபதி வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.


அவ்வாறான பேச்சு வார்த்தையொன்றை முன்னெடுப்பதற்கு தாம் தயார் என்றும்  வடக்கு, கிழக்கு மட்டுமன்றி அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டு அந்த பேச்சு வார்த்தையை நடத்த முடியும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.


இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்த ரவூப் ஹக்கீம் எம்பி, அதிகாரப் பகிர்வு நல்லிணக்கம் உட்பட முக்கிய பல சிறந்த விடயங்களை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் உரையாற்றினார். அது தொடர்பில் பிறிதொரு தினத்தில் விவாதம் நடத்த முடியும்.


சர்வ கட்சி மாநாடு தொடர்பில் தெரிவிக்கையில், சில கட்சிகள் அது தொடர்பான தப்பபிப்பிராயங்களை முன் வைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். எவ்வாறாயினும் வடக்கு, கிழக்கு தொடர்பில் பேசும் போது முஸ்லிம் மக்கள் அங்கு முக்கிய பங்கினை வகிக்கின்றனர்.


அதனை கருத்திற்கொண்டு வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில்  முஸ்லிம் உறுப்பினர்களுடனும் தனியான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை ஜனாதிபதி வழங்க வேண்டும்.


அதே வேளை, உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள அரசாங்க ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாம் ஏற்கெனவே பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.


நாம் கட்சித் தலைவர்கள் என்ற வகையில் முன் வைக்கும் கோரிக்கை என்னவெனில், உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறும் வரை அவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அரசாங்க ஊழியர்கள் அவர்களது கடமையை ஏற்கனவே அவர்கள் மேற்கொண்ட அலுவலகங்களில் முன்னெடுப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் எம்பி ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.


அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “வடக்கு , கிழக்கு மட்டுமின்றி அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நான் தயாராகவே உள்ளேன்” என்றார்.

1 comment:

  1. ரஊப் ஹகீமின் கண்ணோட்டத்தில் இந்த நாட்டு முஸ்லிம்களின் பிரச்சினை என்பது அடுத்த தேர்தலில் அவர் அதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு மீண்டும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராகத் தொடர்வதுதான். முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் மாநாடு என்பது ரணிலைப் பொறுத்தவரை அடுத்த தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று ஐதேக ஆட்சி அமைப்பதும் இவரும் தொடர்ந்து இலவச சனாதிபதியாகத் தொடர்வது. இந்த இரண்டு உள்நோக்கங்களையும் வைத்துக் கொண்டு இந்த இரண்டு நபர்களாலும் சமூகம், நாடு என்ற பாதையில் ஒரு அடியாவது நகர முடியாது என்பதுதான் யதார்த்தம்.

    ReplyDelete

Powered by Blogger.