Header Ads



முஸ்லிம்கள் தமது இருப்பினை உறுதிப்படுத்த கவனம் எடுக்கின்றனர், தமிழர்கள் குறைந்து விட்டார்கள்


கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கவலை வெளியிட்டுள்ளார்.


மட்டக்களப்பு - தன்னாமுனை தொடக்கம் செங்கலடி வரையான குடிநீர் திட்ட ஆரம்பநிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.


நீண்டகாலமாக குடிநீர் பிரச்சினைக்கு முகம்கொடுத்து வந்த இப்பகுதி மக்களின் கோரிக்கை அமைவாக குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,


“தனியாக அபிவிருத்தியை மட்டும் இலக்காக கொண்டு எதனையும் சாதிக்கமுடியாது என்பது எங்களுக்கு தெரியும்.


கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரை தமிழ் சமூகம் தமது இருப்பினை பாதுகாத்தக்கொள்ள வேண்டுமானால் உரிமையையும் அபிவிருத்தியும் ஒன்றுக்கொன்று முரண்படாத வகையில் சமாந்தரமாக கொண்டுசெல்லவேண்டும்.


முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பயணத்தினை எடுத்துப்பார்த்தால் தங்கள் சமூகம் சார்ந்த உரிமை சார்ந்த விடயத்திலும் கவனமாகயிருக்கின்றார்கள். அபிவிருத்தியிலும் கவனமாகயிருக்கின்றார்கள்.


முஸ்லிம் காங்கிரசின் தலைவர், கிழக்கின் பெரும்தலைவராக முஸ்லிம்களால் பார்க்கப்படுகின்றன எம்.எச்.எம்.அஸ்ரப் இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் பாசறையில் வளர்ந்தவர்.


தமிழரசுக் கட்சியின் பேச்சாளராகவும் முக்கிய முஸ்லிம் செயற்பாட்டாளராகவும் இருந்தவர். பின்னர் அதிலிருந்து வெளியேறி இலங்கை முஸ்லிம் காங்கிரசை உருவாக்கினார்.


கிழக்கில் முஸ்லிம்களுக்கான ஒரு கட்சியாக அதனை கொண்டுவந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார். அவரது முன்னெடுப்புகளும் அவரை தொடர்ந்துவந்த முஸ்லிம் தலைவர்களின் முன்னெடுப்புகளும் இன்று கிழக்கில் தமது இருப்பினை உறுதிப்படுத்துவதில் அவர்களது வேலைத்திட்டங்களை கவனமாக முன்னெடுத்துவருகின்றனர்.


கிழக்கு மாகாணத்தில் ஒரு பெரும்பான்மை சமூகமாக தமிழ் சமூகம் இருந்தது. 58.9வீதம் கிழக்கில் தமிழர்கள் இருந்தார்கள்.


ஆனால் தற்போது 38.6வீதமாக தமிழர்கள் உள்ளனர். 20வீதத்தால் தமிழர்களின் விகிதாசாரம் குறைந்துள்ளது. கிழக்கில் தமிழர்கள் பாரிய வீழ்ச்சியாகவே இதை பார்க்கவேண்டியுள்ளது." என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.