Header Ads



உடனடியாக அவசர நிலையை பிரகடனப்படுத்துக, அரச வைத்திய அதிகாரிகள் கோரிக்கை


வைத்தியசாலைக் கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு அமைச்சரவையைக் கூட்டி  உடனடியாக அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியம் அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளது.


இன்று -14- இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த ஒன்றியத்தின் தலைவரான வைத்தியர் ருக்ஷான் பெல்லன இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.


கெனியுலா(Cannula) எனப்படும் ஊசி மருந்துகளை ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம் ஒன்றின் பாகம் விஷமானதால் ஏற்பட்ட தாக்கநிலையால் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் (வயது 31) ஒருவர் மரணித்த சம்பவம் பதிவாகியுள்ளது.


கடந்த சில தினங்களாக  மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குரிய நிலையால், நாட்டின் சில வைத்தியசாலைகளில், சில மரணங்கள் பதிவாகின.


குறித்த நபர் சில தினங்களுக்கு முன்னர் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய்க்கு சிகிச்சைப் பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டார். இதன்போது, அவருக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒரு கையில் கெனியுலா எனப்படும் ஊசி மருந்துகளை ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம் ஒன்றின் பாகம் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த இடத்தில் அவருக்கு தொற்று ஏற்பட்டதுடன் அதன் பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. டெங்கு நோயிலிருந்து குணமடைந்த குறித்த நபர் பின்னர் மாரடைப்புக்கு சிகிச்சைப் பெறுவதற்காக பாணந்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நோய் நிலைமை தீவிரமடைந்தமையால் பல தினங்களாக தீவிர சிகிச்சைகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகிறது.


இதேநேரம், களுபோவில போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 72 வயதான பெண் ஒருவர் சத்திரசிகிச்சைக்கு முன்னரான சிகிச்சைகளின்போது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக  உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


இதற்கு முன்னர், பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்றுவலிக்கு சிகிச்சைப் பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட 21 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்தார். வைத்தியசாலையில் வழங்கப்பட்ட தடுப்பூசி காரணமாகவே அவர் மரணித்ததாக குறித்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.


அதேநேரம், தேசிய கண் வைத்தியசாலையில் வெண்படலத்தை நீக்குவதற்கான சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளருக்கு மருந்து வழங்கப்பட்டதை அடுத்து அவருக்க பார்வைக் குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.


இந்தச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சுகாதார அமைச்சால் பிரத்தியேகமான பிரிவு ஒன்று நிறுவப்பட வேண்டும் என வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.