Header Ads



சுற்றுலாத்துறையினை காரணம் காட்டி, மதுபானசாலைகள் திறப்பதை நிறுத்துங்கள்


சுற்றுலாத்துறையினை காரணம் காட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளை இங்குள்ள அரசியல்வாதிகள் முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


மேலும் வவுணதீவு பிரதேசத்தில் மதுபானசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்களினால் இன்று (17.07.2023) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


நேற்றையதினம் (16.07.2023) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் பொருளாதார நெருக்கடியினால் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர். இந்த நிலையில் மட்டக்களப்பில் உள்ள சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் மிகமோசமானதாக மாறியிருக்கின்றது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு மதுபானசாலைகளை திறப்பதற்கு மட்டக்களப்பில் உள்ள சில அரசியல்வாதிகள் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகளை அதிகரிக்கவேண்டும் என்ற பொய்யான விடயத்தினை வைத்துக்கொண்டு புதிதாக மதுபானசாலைகளை திறப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் சிலர் முன்னெடுப்பது என்பது கவலையான விடயம்.


மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவானது உண்மையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் அதிக தொகையினைக்கொண்ட பிரதேசமாகும்.


இந்த பிரதேசத்தில் மட்டும் மூன்று புதிய மதுபானசாலைகளை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருகின்றது. அப்பகுதியில் உள்ள மக்களை இன்னும் பொருளாதார நெருக்கடிகளுக்குள் தள்ளும் செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.


மாவட்டத்தில் பொருளாதாரத்தினை அழித்துக்கொண்டு வெறுமனே அபிவிருத்தி என்னும் பெயரில் வெறும் இரண்டு வீதிகளுக்கு கல்லையும் மண்ணையும் கொட்டி மக்களை ஏமாற்றுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது.


மட்டக்களப்பு மாவட்டத்தினை சுற்றுலாத்துறையில் அபிவிருத்திசெய்வது என்றால் பல விடயங்கள் இருக்கின்றது செய்வதற்கு. நாங்கள் அதனை பாராளுமன்றத்தில் பல தடவைகள் கூறியிருக்கின்றோம்.


ஆனால் அதனை எதனையும் செய்யாமல் மதுபானசாலைகளை கொண்டுவருவதன் மூலம்தான் சுற்றுலாபயணிகள் அதிகரிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளதுமுடியாது என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.