Header Ads



2 விடயங்களை சரிவர மேற்கொண்டாலே, நாடு எங்கேயோ சென்று விடும்


ஆளுங்கட்சியில் இருந்தால் ஆதரவாகத்தான் பேச வேண்டும். எதிர்கட்சியில் இருந்தால் எதிர்த்துதான் பேச வேண்டும். இது நம் நாட்டினுடைய சாபக்கேடு என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.


வங்கி கட்டமைப்பு தொடர்பாக இன்று (21.07.2023) நாடாளுமன்றில் இடம்பெற்ற வாத பிரதிவாதங்களில் பங்கேற்று உரையாற்றும் போதே இவர் இதனை தெரிவித்துள்ளார்.


இது குறித்து இவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டு முதலீடுகளை நாட்டினுள் கொண்டு வருவது , கடன் வாங்குவது, உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவது என எமது நாட்டை பொருத்தவரை மூன்று வழிகளிலே பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்ள முடியும்.


தொடர்ச்சியாக கடன் வாங்கி பிழைப்பு நடத்துவதானது ஆபத்தானது மற்றும் பயங்கரமானது.


வங்கி கட்டமைப்பு பலமாக இருக்கும் போது தான் நாட்டின் மீது நம்பிக்கை ஏற்படும்


வெளிநாட்டு முதலீட்டாளர்களை உள்நாட்டுக்குள் அனுமதிக்கின்ற போது நாட்டினுடைய பௌதீக வளத்துக்கும் , மனித வளத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.


தற்போது அரசாங்கம் அவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக இந்திய முதலீட்டாளர்களுடைய வருகை தற்போது படிப்படியாக அதிகரித்து வருகின்றது. உற்பத்தி பொருளாதாரத்தை நாங்கள் அதிகரிக்கின்ற போது அதன் மூலம் அந்நிய செலாவணியை நாட்டுக்குள் அதிகரிக்க முடியும்.


இவ்வாறான வழிவகைகளை திட்டமிட்டு செயற்படுத்துகின்ற போது சேமிப்பு அதிகரிக்கும். இதன்மூலம் வங்கி கட்டமைப்பு ஸ்திரமடையும். நாட்டினுடைய வங்கி கட்டமைப்பு பலமாக இருக்கும் போது தான் நாட்டின் மீது நம்பிக்கை வரும்.


இவ்வாறு உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரித்து நாட்டினுடைய தேவையையும் நிறைவு செய்து ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். இது குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.


விவசாய நாடு என்று சொல்லிக்கொண்டு இன்னும் அரிசியையே இறக்குமதி செய்துக்கொண்டிருக்கின்றோம். இந்தநிலை மாற வேண்டும். விவசாயத்தையும் மீன் பிடியையும் சரிவர மேற்கொண்டாலே நாடு எங்கேயோ சென்று விடும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.