Header Ads



நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பிடித்து விபத்து - 25 பேர் உயிரிழப்பு


இன்று (ஜூலை 1) அதிகாலை மும்பை-நாக்பூர் சம்ரித்தி விரைவு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக புல்தானா காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் கடசனே தெரிவித்துள்ளார்.


விபத்தின்போது பேருந்தில் 33 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 25 பயணிகள் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர் மற்ற 8 பயணிகள் உயிர் பிழைத்தனர்.


விபத்துக்குள்ளான பேருந்து நாக்பூரில் இருந்து சம்ரிதி எக்ஸ்பிரஸ் வழியாக புனேவுக்கு வந்துகொண்டிருந்தபோது, புல்தானாவில் உள்ள சிந்த்கேதராஜா அருகே பேருந்தின் டயர் வெடித்தது.


பேருந்தைக் கட்டுப்படுத்த ஓட்டுநர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அருகில் இருந்து மேம்பாலத்தின் பில்லரில் பேருந்து மோதியதில் அதன் டீசல் டேங்க் வெடித்து பேருந்தில் தீப்பற்றியது.


பெரும்பாலான பயணிகள் இந்த விபத்தில் உயிரிழந்த நிலையில், ஒருசிலர் பேருந்தின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியேறி உயிர் பிழைத்தனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் தெரிவித்தார்.


உயிரிழந்தவர்களின் அடையாளங்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் புல்தானாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.


விபத்து நடைபெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாகப் பேருந்து கரஞ்சாவில் உணவுக்காக நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் சம்ரிதி எக்ஸ்பிரஸ் பாதையில் பயணித்த பேருந்து புல்தானா அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.


விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் அதிகாரிகளும் போலீஸாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயணைப்புத்துறை வாகனத்தின் உதவியோடு தீ அணைக்கப்பட்டு, பேருந்தின் உள்ளே இருந்த உயிரிழந்தவர்களின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன.





No comments

Powered by Blogger.