Header Ads



டுபாயில் பிறந்த இலங்கை குழந்தை, காப்பாற்ற அல்லாஹ்விடம் மன்றாட்டம் - 121 நாள் போராட்டம்


துபாயில் 480 கிராம்  எடையுடன்   பிறந்த தங்கள் பெண் குழந்தை, கடுமையான போராட்டத்தின் மத்தியில் உயிர் தப்பிய கதையை இலங்கையை சேர்ந்த பெற்றோர் பகிர்ந்துகொண்டுள்ளனர்.


480 கிராம் எடையுடன்   பல மாதங்கள் முன்னதாகவே  பிறந்த தங்கள் முதலாவது குழந்தையை  காப்பாற்றியமைக்காக இலங்கையைச் சேர்ந்த  ருசானா ரபீக் முகமட் முட்ஹாசிர் தம்பதியினர் துபாயில் லத்தீபா வைத்தியசாலையின் மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.


தங்கள் குழந்தை மாம்பழத்தை விட  சற்று பெரியதாக காணப்பட்டது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தங்கள் சிறிய போர்வீரர் உயிர்தப்பிய வரலாற்றை அவர்கள் கல்ப்நியுசிற்கு வர்ணித்துள்ளனர்.


புதிதாக பிறந்த குழந்தைகள் தொடர்பான வைத்திய நிபுணர் ஜாவெட் ஹபிபுல்லாவின் தலைமையிலான குழுவினரின்  சிறந்த பராமரிப்பு மற்றும் சிகிச்சை காரணமாக அனைத்து நம்பிக்கையின்மைகளையும் மீறி தனது குழந்தை எவ்வாறு வாழ்க்கைக்கான போராட்டத்தில் வெற்றி பெற்றது என்பதை தாயார் விபரித்துள்ளார். 


பெப்ரவரி 23ம் திகதி ருசானா அவசர அவசரமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட வேளையே இந்த போராட்டம் ஆரம்பமானது.


எனது கர்ப்பம் ஆபத்தில் உள்ளது என தெரிவித்தனர் என்கின்றார் ருசானா. பிள்ளை பிறந்தாலும் அது உயிர்தப்பாது என வைத்தியர்கள் தெரிவித்தவேளை எனது இதயம் நின்றுவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.


என்னை பிரசவ அறையில் வைத்திருந்து பல மணிநேரம் என்னை கண்காணித்தார்கள் குழந்தையின் இதயதுடிப்பையும் கண்காணித்தார்கள். அது வழமையானதாக காணப்பட்டது. அதன் மூலம் எனது குழந்தை நல்ல நிலையில் உள்ளது என்பது உறுதியானது எனவும் அவர் தெரிவித்தார்.


எனினும் அது முன்கூட்டியே பிறக்கும் பட்சத்தில் உயிர்வாழ்தல் கடினம் என வைத்தியர்கள் தெரிவித்தனர். கருத்துச்சிதைவு என்ற அடிப்படையில் குழந்தையை பெற்றெடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


குழந்தையின் எடை மிகக்குறைவானதாக காணப்படலாம் என அவர்கள் தெரிவித்தனர். 500 கிராமிற்கும் குறைவான குழந்தைகள் உயிர்தப்புவது கடினம் என்பதால் நம்பிக்கையுடன் இருக்கவேண்டாம் என தெரிவித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ள ருசானா, அவர்கள் குழந்தையை உயிர்ப்பிக்க மாட்டார்கள் என்னை ஆறுதல்படுத்த மாத்திரம் அவர்களால் முடியும் எனவும் தெரிவித்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்தேன், அது எனது முதல்பிள்ளை என்பதால், நான் அதனை இழக்க தயாரில்லை எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை  எனது பிள்ளையை காப்பாற்றுங்கள் என வைத்தியர்களிடம் மன்றாடினேன் எனவும் அவர் தெரிவித்தார்.


சர்வதேச தரவுகளின் அடிப்படையில் 22-23 வாரங்களிற்கு உட்பட்ட குழந்தைகள் உயிர்பிழைப்பதில்லை.


வைத்திய குழுவினர் ஆலோசனை வழங்கியபோதிலும் தனது குழந்தையை காப்பாற்றும்படி ருசானா மன்றாடியுள்ளார்.


குழந்தை 23 வாரங்களின் பின்னர் பிறந்தது - உடல் எடை 450 கிராமாக காணப்பட்டது இது ரிசானாவிற்கு நம்பிக்கையை அளித்தது.


அவள் தானாகவே விரைவில் வெளியே வந்துவிட்டாள் அது இயல்பான பிரசவம், அவள் சுவாசித்துக் கொண்டிருந்தாள். அவளை உடனடியாக எனஐசியுவிற்கு கொண்டு சென்று இன்குபேட்டரில் வைத்தனர் வென்டிலேட்டரை பொருத்தினர் எனவும் ருசானா தெரிவித்தார்.


ருசானாவை மூன்று நாட்களில் வைத்தியசாலையிலிருந்து விடுவித்த வைத்தியர்கள், பிள்ளையின் நிலை குறித்து எச்சரித்தனர். அதேவேளை பிள்ளையை காப்பாற்ற தங்களால் முடிந்ததை செய்தனர்.


எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என அவர்கள் எச்சரித்தனர். நான் இரவுபகலாக அழுதுகொண்டிருந்தேன் , எனது சிறிய தேவதையை காப்பாற்றுமாறு அல்லாவிடம் மன்றாடினேன் -அந்த தருணத்தில் எனது நம்பிக்கையை மாத்திரம் நான் பற்றிப்பிடித்துக் கொண்டிருந்தேன் எனவும் அவர் தெரிவித்தார்.


என்ஐசியுவில் காஜியாவின் சிறிய உடல் உயிர்பிழைப்பதற்கான பெரும் போராட்டத்தில் ஈடுபட்டது. வைத்தியர்களும் தாதிமாரும் 24 மணிநேரம் பிள்ளையை பராமரிப்பதில் ஈடுபட்டனர். தாயும் தந்தையும் ஒவ்வொருநாளும் பிள்ளையை சென்று பார்த்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


பலநேரங்களில் தாய் மனமுடைந்து கதறி அழுவதுண்டு, ஆனால் கணக்கியல் துறையில் பணியாற்றும் குழந்தையின் தந்தையும் அவரது குடும்பத்தினரும் தாய்க்கு பெரும் துணையாகயிருந்து மன ஆறுதலை வழங்கினர்.


நாட்கள் வாரங்களாக. வாரங்கள் மாதங்களாக குழந்தையின் போராட்ட குணம் குறைவடையாமல் அதிகரிக்க தொடங்கியது, அனைத்து நம்பிக்கைகளையும்  தகர்த்து அந்த சிறிய குழந்தை நாளாந்தம் வளரத்தொடங்கியது.


முதலில் தாய்ப்பால் விடயத்தில் தயங்கிய வைத்தியர்கள் பின்னர் சிறியளவு பாலுட்ட அனுமதித்தனர் என தெரிவித்தார் ருசானா,குழந்தை தொடர்ச்சியாக அதிகளவு பால்குடிக்க தொடங்கியது என தெரிவித்துள்ள அவர் பிள்ளை வைத்தியசாலையில் இருந்த நாட்களிலேயே ஆசிரிய உதவியாளர் என்ற தனது வேலையில்  மீண்டும்  ஈடுபட ஆரம்பித்துள்ளார்.


வைத்தியசாலையில் 121 நாள் போராட்டத்தின் பின்னர் குழந்தை அங்கிருந்து நலமாக வீடு திரும்பியுள்ளது.


அவள் உயிர்தப்பிய விதம் அற்புதமானது அவளை அதிசயம் போராளி என அழைக்கின்றனர்.


(வீரகேசரி)




No comments

Powered by Blogger.