Header Ads



பாரதிய ஜனாதாவையும், மோடியையும் வீழ்த்த 17 கட்சிகள் ஒன்றிணைவு


பாஜக தலைமையிலான மத்திய அரசை வீழ்த்த 17 கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் என்று பாட்னா எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்குப் பிறகு நிதிஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டார்.


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் இன்று (ஜூன் 23) நடைபெற்றது. பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவ சேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.


மக்களவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து, தலைவர்கள் அனைவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நிதிஷ் குமார். "இந்த ஆலோசனைக் கூட்டம் நல்ல முறையில் நடந்தது. பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். வரும் மக்களவைத் தேர்தலை 17 கட்சிகளும் ஒருங்கிணைந்து எதிர்கொள்வது என்ற முடிவு இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம் இமாச்சலப் பிரதேச தலைநகர் ஷிம்லாவில் அடுத்த மாதம் நடைபெறும். நாடாளுமன்றத் தேர்தலை இணைந்து எதிர்கொள்வதற்கு ஏற்ப பொதுத் திட்டத்தை வகுக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம். இதனை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவெடுப்போம். இணைந்து செயல்படுவதற்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியான திட்டங்களை வகுத்து செயல்படுவோம். மத்தியில் உள்ள பாஜகவை வீழ்த்துவதே எங்கள் இலக்கு" எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.