Header Ads



கடை தீப்பிடித்து பொருட்கள் எரிந்து நாசம், மாடியில் வசித்த பெண்ணும் சிறுவர்களும் மீட்பு (படங்கள்)


- ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர் நகரின் புன்னைக்குடா வீதியிலுள்ள பல சரக்குக் கடையொன்றின் பலசரக்குகள் களுஞ்சியப் பகுதி வியாழக்கிழமை 30.03.2023 பகல் வேளையில் திடீரென தீப்பற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


அந்தக் கடையிலும் அயலிலுள்ள கடைகளிலும் வியாபாரம் இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுது இந்தத் தீ விபத்து நிகழ்ந்தது.


பலத்த வெடிச் சத்தங்களுடன் தீ பற்றிக் கொண்டு கரும்புகை மூட்டம் எழுந்ததால் வீதியிலும் சுற்றியுள்ள கடைகள் வீட்டுப் பகுதிகளிலும் பரபரப்பு ஏற்பட்டது.


வெடிச் சத்தங்களுடன் கரும்புகை வெளிக்கிளம்ப அந்தப் பல சரக்குக் கடைத் தொகுதியின்   மேல் மாடியில் வசித்த பெண்ணும் சிறுவர்களும் கூக்குரலிட்டு உடனடியாக முன் பகுதிக்கு ஓடி வந்தபோது உதவிக்கு விரைந்தோரால் அவர்கள் ஏணி வைத்து இறக்கிக் காப்பாற்றப்பட்டனர்.


அந்தக் கடைத் தொகுதியில் வெல்டிங் வேலைகள் இடம்பெற்ற பொழுது வெல்டிங் செய்த தீப்பொறிகள் பட்டாசுகளில் பட்டு, உடனடியாகவே பட்hசுகள் தீப்பற்றிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


எனினும் தீ கடையிலும் அயல் பகுதி கடைகள், வீடுகளில் மேலும் பரவாமல் உதவிக்கு விரைந்தோரால் தீ அணைக்கப்பட்டு விட்டது.


இந்தச் சம்பவத்தில் கடையிலிருந்த சுமார் 10 இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட பால்மா, அரிசி, சோடா உள்ளிட்ட இன்னும் பல பொருட்கள் தீயில் கருகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.




No comments

Powered by Blogger.