Header Ads



'வியத்மக' கும்பலின் தான்தோன்றித்தனம் - கண்டிக்கிறார் அலி ஸாஹிர்


ஏறாவூர் புன்னைக்குடா வீதியின்  பெயரை மாற்றும் கிழக்கு ஆளுநரின் முயற்சிக்கு  முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா கண்டனத்தை தெரிவித்துள்ளார்,


குறித்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...


கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து, காலியைச் சேர்ந்த மறைந்த வர்த்தகர் ஒருவரின் நினைவாக அஞ்சலி செலுத்தும் போர்வையில் ஏறாவூரில் உள்ள பிரதான வீதியொன்றின் பெயரினை இங்குள்ள மக்களுடன்  கலந்தாலோசிக்காமல் பெயர் மாற்றம் செய்வது  தேவையற்றமுறையில் இனங்களுக்குடையே ஒரு பதற்றத்தைத் தூண்டக்கூடிய விடயமாக இருப்பது மிகவும் கவலையளிக்கிறது.


புன்னைக்குடா வீதியானது ஏறாவூரின் இதயம் போன்று ஊரின் மத்திய பகுதியினூடாக செல்லும் ஒரு பிரதான வீதியாகும், இது A15 நெடுஞ்சாலையை புன்னைக்குடா கடற்கரையுடன் இணைக்கிறது.


இலங்கையின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் முயற்சியாக, வெளிநாட்டு நேரடி முதலீட்டை உள்வாங்குவதற்காக, முதலீட்டு சபையினது (BOI ) முதலீட்டலுடன் ஏறாவூர் புன்னைக்குடாவில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுவரும் பிடவை உற்பத்தி வர்த்தக வலயத்துக்கு (பேப்ரிக் பார்க்) சென்றடையக்கூடிய அணுகல் பாதையும் இதுவாகும் .


ஏறாவூர் நகர சபையின் தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் நான் கடமையாற்றிய காலப்பகுதியில், எனது பல முயற்சிகளால் இந்த வீதி அழகான முறையில் செப்பனிடப்பட்டு, ஒரு கேந்திர மையமாக தேசியரீதியாகவும் , பிராந்திய மட்டத்திலும் பொருளாதார முதலீடுகளை உள்வாங்கக்கூடிய வர்த்தக- வணிகங்களுக்கு வழி சமைத்துக் கொடுத்து பிரபல்யம் அடைந்துள்ளது. 


இங்கு வாழும் மக்களதும், மற்றும் இந்த பிரதேசத்தில் அங்கம் வகிக்கின்ற முக்கிய பங்குதாரர்கள், நிறுவனங்களினதும் கலந்தாலோசனைகளும் இன்றி ஒருதலைப்பட்சமாக இந்த முக்கியமான பிரதான வீதியின் பெயரை மாற்றுவது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “வியத்மக” என்ற கும்பலில் ஒருவர் என்ற தகுதியால் ஆளுனர் நியமனம் பெற்ற அனுராதா யஹம்பத்தின் அதிகார துஷ்பிரயோகத்தின் ஒரு வெளிப்பாடே தவிர வேறொன்றம் இல்லை. 


மட்டக்களப்பு மாவட்டத்திற்கென்றே மாண்புமிக்க வரலாறும், பாரம்பரியமும் உண்டு. 

ஒரு நபரை, ஓர் இடத்தை, ஒரு பொருளை நினைவு கூறும் வகையில் ஒரு வீதியின் பெயரை சூட வேண்டுமானால் - அதைத் தீர்மானிக்க வேண்டிய தகமையை அப்பிரதேச குடியிருப்பாளர்களிடமும் , அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரதிநிதிகளிடமும் இருக்க வேண்டுமே தவிர, இனரீதியாக மக்களை பிளவுபடுத்தி ஆட்ச்சிசெய்ய நினைத்த ஜனாதிபதியால் ஆளுனராக நியமிக்கப்பட்ட கொழும்பிலே, ஓர் அலட்சியமான ஆடை வடிவமைப்பாளாராக தன்னை சந்தை படுத்தியவரால் அல்ல . 


ஏறாவூர் மக்கள் சார்பாக, இந்த வீதியின் பெயரை மாற்றுவதற்கான தான்தோன்றித்தனமாக விடுத்துள்ள தவறான உத்தரவை உடனடியாக ரத்து செய்யுமாறு கண்டனத்துடன் கோருவதடன், ஆளுனர், அவரது அவசியமற்ற இவ்வாறான விசித்தரமான நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் கிழக்கு மாகாண மக்களின் விருப்பங்களுக்கு முரணாக இருப்பதை உணர்ந்து செயற்படுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.


அலி ஸாஹீர் மௌலானா

முன்னாள்  அமைச்சர் 

முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்  தலைவர்

No comments

Powered by Blogger.