Header Ads



புலஸ்தினி நாட்டிலிருந்து வெளியேற உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் அதிகாரி அபூபக்கர் விடுதலை



உதித்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் ஒரு முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் (ஸாரா ஜஸ்மின்) என்பவர் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல தனது வாகனத்தில் ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களாக சிறையில் இருக்கும் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் (20) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நாகூர்த்தம்பி அபூபக்கர் புலஸ்தினி மகேந்திரனைப் பற்றிய தகவலைத் தெரிந்தும் அதனை வெளிப்படுத்தாதமைக்காகவும். அவரை நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 13.07.2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் தடுப்புக்காவில் வைக்கப்பட்டு 08.04.2021ல் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார்.


தான் செய்யாத குற்றத்திற்க்காக கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றமையானது தனது அடிப்படை உரிமையை மீறியுள்ளதாகக் கூறி பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர் 2021 ஜூன் மாதம் 29ம் திகதி இலங்கை உச்ச நீதிமன்றில் தனது சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமாகிய  ஏ. எல். ஆஸாதினூடாக அடிப்படை உரிமை வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.


இந்நிலையில் சுமார் 32 மாதங்களாக தடுப்புக்காவலிலும் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர் அவர்கள் இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதபதி என். எம். எம். அப்துல்லாஹ் அவர்களினால் பிணையில்  விடுவிக்கப்பட்டார்.


அரச சார்பில் தோன்றிய அரச சட்டத்தரணி  ஸக்கி இஸ்மாயில் குறிப்பட்ட நபருக்கு பிணை வழங்கப்படுவதற்கு எதிராக தனது கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார். பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர் அவர்கள் சார்பில் தோன்றிய சிரேஷ்ட சட்டத்தரணி என். எம். ஷஹீட், சட்டத்தரணிகளான ஏ.எல்.ஆஸாத், சலாஹுதீன் சப்ரின் மற்றும் பாத்திமா பஸீலா ஆகியோர் செய்த சமர்ப்பணங்களைச் செவியேற்ற நீதிபதி பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர் அவர்களை இன்று  பிணையில் விடுதலை செய்தார்.


பயங்கரவாத தடுப்புச்சட்டமானது ஒரு கொடூரமாக சட்டமாகவும், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கைகளில் அதீத அதிகாரத்தை வழங்கி சட்ட முரணான கைது, சட்டமுரணான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கு இடமளிக்கும் சட்டமாகவும் இருந்து வருகிறது. இதனை இல்லாதொழிக்க மனித உரிமை அமைப்புக்கள் மும்முரமாக உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் பல ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றன.

No comments

Powered by Blogger.