உலக சாதனை படைத்தார் ரொனால்டோ
லிஸ்பன், 17-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி (யூரோ சாம்பியன்ஷிப்) ஜெர்மனியில் அடுத்த ஆண்டு (2024) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடக்கிறது.
'ஜெ' பிரிவில் இடம் பெற்றுள்ள போர்ச்சுகல் அணி தலைநகர் லிஸ்பனில் நடந்த தனது முதலாவது லீக் ஆட்டத்தில் லீக்டன்ஸ்டைன் அணியை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய போர்ச்சுகல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் லீக்டன்ஸ்டைனை பந்தாடியது. போர்ச்சுகல் அணி தரப்பில் கான்செலோ 9-வது நிமிடத்திலும், பெர்னார்டோ சில்வா 47-வது நிமிடத்திலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 51-வது மற்றும் 63-வது நிமிடங்களிலும் கோல் அடித்தனர்.
போர்ச்சுகல் அணியின் கேப்டனும், முன்கள வீரருமான 38 வயது ரொனால்டோவுக்கு இது 197-வது சர்வதேச போட்டியாகும். சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரொனால்டோ இந்த ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் அவரது சர்வதேச கோல் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்தது.
அத்துடன் இந்த போட்டியில் களம் இறங்கியதன் மூலம் ரொனால்டோ அதிக சர்வதேச கால்பந்து போட்டியில் (197 ஆட்டம்) விளையாடிய வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.
இதற்கு முன்பு பாடர் அல் முடாவா 196 சர்வதேச போட்டியில் ஆடியதே சாதனையாக இருந்தது.
அதனை ரொனால்டோ தகர்த்து புதிய வரலாறு படைத்தார்.
Post a Comment