Header Ads



கொழும்பில் சில செலவுகள் 75 வீதத்தினால் அதிகரிப்பு


சில நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வணிகப் பயணங்களுக்கான செலவுகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஈசிஏ இன்டர்நேஷனல் நடத்திய அண்மைய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. குறுகிய பயணச் செலவுகள், நான்கு நட்சத்திர விடுதி அறைகள், உணவு, சலவை, மது மற்றும் குளிர்பானங்கள், வாடகை வாகன பயணங்கள் மற்றும் தற்செயலான செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கமைய ஈசிஏ இன்டர்நேஷனல், நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளது.


வணிகப் பயணங்கள் மற்றும் குறுகிய காலப் பணிகளுக்காக, பிரவேசிக்கும் நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை, லாவோஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், பயணிகளுக்கான செலவினங்களில் பாரியளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, கொழும்பில் வணிக பயணச் செலவுகள், உள்ளூர் நாணயத்தின் அடிப்படையில் 2022 ஆண்டில் இருந்ததை விட 75% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணவீக்க வீதங்கள் மற்றும் நாணய பெறுமதி தேய்வு போன்றவை இவற்றுக்கான காரணிகளாக இருக்கலாம் என்று அந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. வணிகப் பயணத்துடன் தொடர்புடைய சில செலவுகள், பொதுவாக வணிகப் பயணிகளால் அமெரிக்க டொலர்களில் செலுத்தப்படுவதால் இந்த நிலை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் ஆசியாவில் வணிக பயணத்திற்கான அதிக செலவுகளை ஏற்படுத்தம் நாடுகளின் பட்டியலில் முறையே முதல் இரு இடங்களில் உள்ளன. இந்த நாடுகளில் தினசரி செலவுகள் முறையே 520 அமெரிக்க டொலர் மற்றும் 515 அமெரிக்க டொலர்களாகும் என ஈசிஏ இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.