Header Ads



பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன், 4 இளைஞர்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம்


வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் ஜனாஸாக்கள் நேற்று(22) நல்லடக்கம் செய்யப்பட்டன.


அம்பாறையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா சென்ற 10 இளைஞர்கள் கடந்த 21 ஆம் திகதி எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றிருந்தனர்.


இதன்போது இளைஞரொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதுடன் அவரை காப்பாற்ற முயற்சித்த மற்றைய 3 இளைஞர்களும் அதிக நீர் வரத்து காரணமாக நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கல்முனைக்குடி, சம்மாந்துறை, சாய்ந்தமருது ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20, 21 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் நால்வரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.


சம்மாந்துறையைச் சேர்ந்த அகமட் முகமட் அப்ஸால் என்பவரின் ஜனாஸா நேற்று(22) மாலை சம்மாந்துறை மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.


கல்முனைக்குடியைச் சேர்ந்த முகம்மட் லாபீர் அகமட் சுஹரி மற்றும் அபூபக்கர் அனாத் என்பவரினதும் ஜனாஸாக்கள் கல்முனைக்குடி நூரானிய்யா மையவாடியில் நேற்றிரவு(22) நல்லடக்கம் செய்யப்பட்டன.


சாய்ந்தமருதைச் சேர்ந்த முக்தார் முகம்மட் நபீஸின் ஜனாஸா சாய்ந்தமருது பொது மையவாடியில் நேற்றிரவு(22) நல்லடக்கம் செய்யப்பட்டது.


நால்வரின் ஜனாஸாக்களின் நல்லடக்கத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். 

No comments

Powered by Blogger.