Header Ads



பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு - சில Mp க்கள் தமது வாகன இலச்சினைகளை அகற்றினர்


மாதிவெல பகுதியில்  உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதிக்கு உடனடியாக நடைமுறைக்கு  வரும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின்  உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வீட்டுத் தொகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலனாய்வுக் குழுக்களும் உஷார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40க்கும் மேற்பட்டவர்கள் தமது வாகனங்களில் முன் கண்ணாடியில் காட்சிப்படுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இலச்சினையை அகற்றியுள்ளதாக தெரியவருகிறது.

இதனை சிலர் நாடாளுமன்றத்தின் பிரதான அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை கொள்வனவு செய்ய வரிசையில் நிற்கும் மக்களிடம் இருந்து ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம் என காரணத்தினால், பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினருக்கு இலச்சினைகளை வாகனங்களில் இருந்து அகற்றுமாறு அறிவித்துள்ளனர்.

அதேவேளை சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் வேறு வரிசைகள் காணப்படும் இடங்களை தவிர்த்து வாகனங்களில் பயணம் செய்யுமாறு பாதுகாப்பு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.