Header Ads



சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை இப்போதுதான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது


- எம். மணிகண்டன் -

பொருளாதார நெருக்கடியின்போது, வேறுபாடுகளைக் கடந்து நடக்கும் போராட்டங்களின்போதுதான் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார் போராட்டங்களில் பங்கேற்கும் ஆட்டோ ஓட்டுநரான ஜெகன்.

சிலமாதங்களுக்கு முன்பிருந்தது போல அவரது வாழ்க்கை இப்போது இல்லை. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி சாமானிய மக்களை கூடுதலாகப் பாதித்திருக்கிறது என்பதற்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு.

இலங்கை காலி முகத் திடலில் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டம் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்திருக்கிறது. வார இறுதி நாள்களில் மற்ற நாள்களை விட கூட்டம் அதிகமாக இருக்கிறது. ஜெகனும் அவ்வப்போது அங்கு சென்று போராட்டத்தில் பங்கேற்கும் நபர்களில் ஒருவர்.

"மலையகத்தில் இருந்து வந்து சுமார் 12 ஆண்டுகளாக கொழும்பு நகரில் ஆட்டோ ஓட்டுகிறேன். சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது. பெட்ரோல் விலை, அத்தியவசியப் பொருள்களின் விலை ஆகியவை வாழ்க்கையை மோசமாகப் பாதித்திருக்கிறது" என்கிறார் ஜெகன்.

இலங்கை மலையகத்தைச் சேர்ந்த ஜெகனுக்கு இரண்டு குழந்தைகள். ஒருவர் பள்ளி செல்கிறார். மற்றொவருவருக்கு இன்னும் பள்ளி செல்லும் வயதாகவில்லை.

தற்போதைய சூழல் அவரை இரண்டு புறங்களில் இருந்து அழுத்துகிறது. ஒருபுறம் பெட்ரோல் விலை உயர்வால் வருமானம் குறைந்துவிட்டது. மறுபுறம் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பால் அவற்றை போதுமான அளவு வாங்க இயலவில்லை.

"ஆட்டோவுக்கு பெட்ரோல் போடுவதற்கு பல மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 340 ரூபாய். முன்பெல்லாம் 5 கிலோ மீட்டருக்கு ஓட்டினால் 300 ரூபாய் வரை கிடைக்கும். இப்போது கட்டணத்தில் பெரிய வித்தியாசமில்லை. 360 ரூபாய்தான் கிடைக்கிறது. ஆனால் 140 ரூபாய்க்கு விற்ற பெட்ரோலின் விலை இரண்டு மடங்கையும் தாண்டி விட்டது."

"இலங்கையில் மொத்தம் 15 லட்சம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. கொழும்புவில் மட்டும் 5 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள் இருக்கிறார்கள்." என்கிறார் கொழும்பு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் தேவானந்த சுரவீர.

இலங்கை ரூபாயின் மதிப்பு கடந்த ஓரிரு மாதங்களில் மிக வேகமாகச் சரிந்துவிட்டது. ஒரு அமெரிக்க டாலருக்கு 340 இலங்கை ரூபாய் தர வேண்டும் என்ற நிலைமை. இரு மாதங்களுக்கு முன்பு இந்த மதிப்பு 200 ரூபாய்க்குள்தான் இருந்தது. வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் முன்பு ஒரு குறிப்பிட்ட சவாரிக்கு 3 டாலர்கள் கொடுத்தார்கள் என்றால் இப்போது 2 டாலர்கள் கொடுத்தால் போதும் என்றாகிவிட்டது.

"நடுத்தர மக்கள்தான் ஆட்டோக்களை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இப்போது அவர்களே நெருக்கடியில் இருக்கிறார்கள் என்பதால் ஆட்டோக்களை பயன்படுத்துவது குறைந்துவிட்டது" என்கிறார் தேவானந்த சுரவீர.

பெட்ரோல் விலையைக் குறைப்பதுடன், வாகன உதிரிப் பாகங்கள், காப்பீட்டின் விலை, வாகனப் பதிவு கட்டணம் ஆகியவற்றையும் அரசு குறைக்க வேண்டும் என்று தேவானந்த சுரவீர கோரிக்கை விடுக்கிறார்.

ஃபைனான்ஸ் மாஃபியா எனப்படும் கும்பல் கடன்களைக் கேட்டு மிரட்டுவதால் ஆட்டோ ஓட்டுநர்கள் தவித்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

"போராட்டங்களின் மூலம் தீர்வு"

கொழும்பு நகரில் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்துகின்றனர். இது தவிர காலி முகத் திடலில் பெரிய போராட்டம் ஒன்று தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

போராட்டம்

ஆட்டோ ஓட்டுவதுடன் அவ்வப்போது போராட்டங்களிலும் பங்கெடுக்கிறார் ஜெகன். போராட்டங்கள் மூலமாக தனது பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்.

"இன மத மொழி வேறுபாடு இல்லாமல் மக்கள் ஒன்றாகச் சேர்ந்து போராட்டம் நடத்துவதைப் பார்க்கும்போது மகிழ்சியாக இருக்கிறது. பிரிவினை கொண்ட நாடுகள் முன்னேற முடியாது" என்கிறார்.

இப்போது நடக்கும் போராட்டத்தைப் போல இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் ஒன்றாகச் சேர்ந்திருந்தால் இப்போது இலங்கை சிங்கப்பூரைவிடவும் முன்னேறிய நாடாக மாறியிருக்கும் என்கிறார் அவர்.

"சிங்கள, முஸ்லிம் மக்களை இப்போதுதான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இதே ஒற்றுமை நீடித்திருக்க வேண்டும்" என்று அவர் விருப்பம் தெரிவிக்கிறார். BBC

1 comment:

Powered by Blogger.