பொருளாதார அனர்த்த நிலைமையை எதிர்நோக்கியுள்ளோம், அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் - அனுரகுமார
இலங்கை தற்பொழுது பொருளாதார அனர்த்த நிலைமையை எதிர்நோக்கி வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால், அரசாங்கத்தை விரட்டியடிக்கும் போராட்டத்தை ஆரம்பிக்க அனைவரும் தயாராக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எமது நாடு தற்போது எதிர்நோக்கி இருப்பது சாதாரணமான பொருளாதார நெருக்கடியை அல்ல. சாதாரணமான பொருளாதார பிரச்சினையல்ல. இது பொருளாதார அனர்த்த நிலைமை. எமது நாடு போன்ற நாடுகளில் பொருளாதாரத்தின் நான்கு பிரதான தூண்கள் உள்ளன.
முதலாவது டொலர், சாதாரணமாக எமது நாட்டில் டொலர் இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் என ஒரு மாதத்தில் அல்லது இரண்டு மாதங்களின் பின்னர் அதிகரிக்கும்.
ஆனால், தற்போது என்ன நடந்தது, டொலர் ஒன்றின் விலை 200 ரூபாவில் இருந்து 270 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது. இது எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிர்வையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
இதுதான் நாம் எதிர்நோக்கும் பிரதான சிக்கல். அடுத்தது அனைத்து பொருளாதார விடயங்களிலும் தங்கி இருக்கும் எரிபொருள் விலை. நேற்று என்ன நடந்தது, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பெட்ரோலின் விலையை 77 ரூபாவிலும் டீசலின் விலையை 55 ரூபாவிலும் அதிகரித்தது.
இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment