Header Ads



ஈஸ்டர் தாக்குதலை அரசியல் சூழ்ச்சி என, எவரும் கூறுவார்களானால் அது நகைப்பிற்கிடமானது - வீரசேக்கர


பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு மிக அவசியமானது. தற்போது அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் எதிர்காலத்தில் மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அது முழுமையான சட்டமாக கொண்டு வரப்பட வேண்டுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதனை அரசியல் சூழ்ச்சி என எவரும் கூறுவார்களானால் அது நகைப்பிற்கிடமானதென்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று பயங்கரவாத தடைச்சட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:   1979ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் .ஜயவர்த்தன எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த சட்டத்தை கொண்டு வந்தார். 

தற்போது நடைமுறையிலுள்ள பழைய சட்டத்தில் திருத்தம் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டங்களைப் பார்க்கும் போது, எமது நாட்டிலுள்ள சட்டத்தில்  மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தனியான சட்டமாக இது கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.  பயங்கரவாதம் உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாகியுள்ள நிலையில், அதற்கு ஒன்றிணைந்த நடவடிக்கைகள் அவசியமாகிறது. 

பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்பவர்களும் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவர். அந்தவகையில் பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிட வசதி வழங்குவோர் மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழுக்களுக்கு உதவி செய்பவர்களும் சர்வதேச ரீதியில் பயங்கரவாதிகளாகவே கருதப்படுகின்றனர். சர்வதேச நாடுகளிலுள்ள சட்டங்களை பார்க்கும்போது நீதிமன்ற உத்தரவுக்கு அப்பாலும் தடுத்து வைக்கப்படலாம் என அவற்றில் கூறப்படுகிறது.  எமது நாட்டில் எல்லைக் கிராம தாக்குதல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற தாக்குதல்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகளை தடுப்பதற்கு இந்த சட்டம் அவசியமாகும். 

அத்துடன் சைபர் தாக்குதல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சைபர் தாக்குதல்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றை தடுப்பதற்கும் இந்த சட்டத்தில் விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம்)

No comments

Powered by Blogger.