தாக்குதல் நடாத்திய குழு முஸ்லிமாக இருந்தாலும், பின்னணியில் யார் என்பதே பிரச்சினை - சிறில் காமினி
சிங்களத்தில் : பிரியன்த கொடிப்பிலி, தமிழில் : ஏ.ஆர்.ஏ.பரீல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்திய குழு முஸ்லிமாக இருந்தாலும் இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பதே இப்போதுள்ள பிரச்சினை. தாக்குதலுக்கு முன்பு கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொலை செய்யும் அளவுக்கு பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லை. இது அரசியல் சூழ்ச்சி எனும் சந்தேகம் நிலவுகிறது’ என்கிறார் ‘ஞானாந்த பிரதீப’ எனும் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் சிறில் காமினி.
அவருடனான நேர்காணலின் விபரம்;
கேள்வி: உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணை நீடித்துச் செல்கிறது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு சென்றால் யார் குற்றவாளியாகுவார்கள்?
நாங்களும் அதையே பார்த்துக்கொண்டிருக்கிறோம். தற்போதைய நிலைமையில் இந்த விசாரணைகளின் இறுதி தீர்ப்பு, தீர்மானங்கள் தொடர்பில் எதுவும் தெளிவாக இல்லை. என்ன நடக்கப் போகிறது என்பதை பார்த்துக்கொண்டிருக்கும் நிலைமையே எமக்கும் ஏற்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று மூன்று வருடங்களை அண்மித்துள்ளது.
இரண்டு ஆணைக்குழு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது ஹேமசிறி பர்ணாந்துவும், பூஜித் ஜயசுந்தரவும் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் சுமார் 20 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர்கள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என இனங்காணப்பட்டவர்களாவர். இந்த வழக்குகள் நீதிமன்றில் விசாரணையின் கீழ் உள்ளன. என்றாலும் அதற்குப் பின்பு உருவான புதிய விடயங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகின்றனவா? இல்லையா? என்பது பற்றி எமக்குத் தெரியாது. இத்தாக்குதலின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துங்கள் என்பதே எமது கோரிக்கையாகும். ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து பார்க்கும்போது இத்தாக்குதல் முஸ்லிம் அடிப்படைவாத குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்ற சந்தேகத்துக்கு இதுவரை விடை பெற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது.
இது தொடர்பாக இதுவரை நடைபெற்றுவரும் விசாரணைகளின் முறைமைகளை நோக்கும்போது உண்மை வெளிப்படுத்தப்படுமா? அல்லது நீதி வழங்கப்படுமா என்பதில் எமக்கு நம்பிக்கையில்லை.
கேள்வி: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இவ்விவகாரம் தொடர்பில் என்ன நடக்கும் என எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் அது போன்று சேனாதி தலைவராகவும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பூரண பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தப் பொறுப்பிலிருந்தும் விடுபட அவரினால் முடியாது. ஏப்ரல் மாதம் 4ஆம் திகதியிலிருந்து இந்த தாக்குதல் தொடர்பான தகவல்கள் நிலந்த ஜயவர்தனவுக்குக் கிடைத்துள்ளன. 4 தடவைகள் இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாம். இவை உண்மையான தகவல்கள். ஜனாதிபதி ஆணைக்குழுவில் இது தொடர்பில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மைத்திரிபால சிறிசேன தகவல்கள் எதனையும் தான் அறிந்திருக்கவில்லையென்றும், எவரும் தனக்கு தகவல்களை வழங்கவில்லை என்றும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார். என்றாலும் ஜனாதிபதி ஆணைக்குழு இவரது சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மைத்திரிபால சிறிசேன தனது பொறுப்பினை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அதனால் அவருக்கு எதிராக வழக்கு தொடர்வதுபற்றி கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் சட்டமா அதிபரின் சிபாரிசு உள்ளது.
கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொலை செய்யும் அளவுக்கு பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லையல்லவா? அதனால் இது அரசியல் சூழ்ச்சி எனும் சந்தேகம் நிலவுகிறது. அதாவது அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வது மற்றும்
அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் தேவைப்பாடு இதன் பின்னால் இருந்துள்ளது எனும் சந்தேகங்கள் அதிகரிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி இத்தாக்குதல் தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை என்பதை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை என்பது எமக்கு இதிலிருந்து தெளிவாகிறது. அவர் இத்தாக்குதல் பற்றி அறிந்திருந்தாரா அல்லது இல்லையா? இதற்குப் பொறுப்புக் கூற வேண்டுமா? இல்லையா? என்பது சட்டத்தின் மூலமே தெளிவுபடுத்தப்பட வேண்டும். நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராகவும் இது போன்ற சிபாரிசு ஒன்று உள்ளது. அதனால் இவர்களை பொறுப்புக்களிலிருந்தும் வெளியேறுவதற்கு இடமளிக்க வேண்டாம் என்றே நாங்கள் கூறுகிறோம். மேலும் பலர் இத்தாக்குதலின் பின்னணியில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஒருவரை இலக்கு வைக்குமாறு நாம் கூறவில்லை. பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கு சட்டமா அதிபர் கடமைப்பட்டுள்ளார். ஆனால் இது நடைபெறாமையே பிரச்சினையாகும்.
கேள்வி : இந்த தாக்குதல் பற்றி மூன்று வருட காலமாக கர்தினால் அடிக்கடி அறிக்கைகள் விடுகிறார். ஆனால் அரசாங்கம் இது பற்றி கவனத்தில் கொள்வதில்லை. அரசாங்கம் கர்தினாலைக் கூட கணக்கெடுப்பதில்லை அல்லவா?
அதுதான் எங்களுக்கும் உள்ள பிரச்சினை. இது தொடர்பான எதனையும் அரசாங்கம் கவனத்தில் கொள்வதில்லை. அரசாங்கம் என்று ஒன்று இருப்பது மக்களுக்காகவல்லவா? அரசாங்கம் மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும். இது போன்ற பாரிய தாக்குதல் ஒன்று இடம்பெற்ற பிறகு அது பற்றி முறையான விசாரணைகளை நடாத்தி உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டியது, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டியது சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ், இரகசிய பொலிஸ் பிரிவு என்பவற்றின் பொறுப்பாகும். இந்தப் பொறுப்பு சரியாக நிறைவேற்றப்படும் நிலைமை இங்கு இல்லை. இது பற்றி தெரிவிக்கப்படுபவை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை.
கர்தினால் அவர்களும் இது பற்றி பல தடவைகள் கூறியிருக்கிறார். அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த தாக்குதல் சம்பவத்தை மூடி மறைப்பது ஏன் என்ற சந்தேகமே எம்மத்தியில் நிலவுகிறது. பொறுப்புக் கூறவேண்டியவர்கள் உண்மையை வெளிப்படுத்தத் தயங்குவது ஏன் என்று பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. கர்தினால் உட்பட ஏனையவர்கள் கூறுபவைகளை கேட்பதற்கும் அதில் கவனம் செலுத்துவதற்கும் அரசாங்கம் செவிசாய்க்காமை சிக்கலை உருவாக்கியுள்ளது.
கேள்வி : கர்தினால் முதல் அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் அல்லவா?
இது தான் இப்போது நடந்திருக்கிறது. 69 இலட்சம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் அல்லவா? கியூ வரிசைகளில் நிற்கும் மக்கள் இதைக் கூறுகிறார்கள். சமூக ஊடகங்கள் பல்வேறு கருத்துகளை வெளியிடுகின்றன.ஒரு பதிவு இவ்வாறு கூறுகிறது. “குற்றச்செயல்களிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டு வருவதை நோக்கினால் அனைவரும் விடுதலையாகி இறுதியில் கர்தினால் அவர்கள் சிறைக்குச் செல்லும் நிலைமைதான் உள்ளது” உண்மையில் இது தான் மக்களின் நிலைப்பாடு. இறுதியில் இத்தாக்குதல் தொடர்பில் பேசுபவர்களே குற்றவாளியாவார்கள்.
நன்றி : ஞாயிறு லங்காதீப, -Vidivelli-
Post a Comment