Header Ads



பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்களில் நன்மதிப்பைப் பெற்றவர்களையும், குற்றச்செயல்களுடன் சம்மந்தப்படாதவர்களையும் உள்ளீர்க்க திட்டம் (வீடியோ)


- பாறுக் ஷிஹான் -

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் உருவாக்குவதற்கான முன்னாயத்த நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கல்முனை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இன்று (17) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலானது கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  தலைமையில் இடம்பெற்றதுடன் சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம் வாஹீட் ஒருங்கிணைப்பில்  38 கிராம சேவகர்பிரிவுகளை சேர்ந்த கிராம   உத்தியோகத்தர்கள்(GS) பொலிஸார் இணைந்து பங்குபற்றினர்.

இதன்போது கல்முனை  பிரதேசத்திற்கான  பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்களை எவ்வாறு அமைப்பது, அதன் நோக்கம், இந்த குழுக்களில் எத்தனை பேர் உள்வாங்க வேண்டும், பெண்களின் பங்களிப்பு  ,உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் இக்குழுக்களின் ஊடாக பிரதேசத்தில்  குற்றச்செயல்களை தடுப்பது,போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்தல்,சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு செய்தல் போன்ற செயற்பாடுகளை நோக்காகக் கொண்டு  நாடு பூராகவும் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தையும் மையப்படுத்தி    அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இக்குழுவில்  சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்ற அதேவேளை குற்றச்செயல்களுடன் சம்மந்தப்படாத பிரமுகர்கள் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட வேண்டும் என கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீரினால்  இக்கலந்துரையாடலில்    வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ளடங்கும் 38 கிராம சேவகர் பிரிவுகள் தோறும்  அமைக்கப்படுகின்ற பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்களின் அங்கத்தவர்களுக்கு உத்தியோக பூர்வ அடையாள அட்டை ஒன்றும்  வழங்கப்படவுள்ளன.  

No comments

Powered by Blogger.