அரபுக் கல்லூரிகளை 50 க்கும் 75 க்கும் இடையில் மட்டுப்படுத்த அரசாங்கம் உத்தரவு, மக்தப் கல்வி நிறுத்தப்பட வேணடுமென பரிந்துரை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டிலுள்ள அரபுக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 50க்கும் 75க்கும் இடையில் மட்டுப்படுத்தும்படி அரசாங்கம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
தற்போது நாட்டில் 317 அரபுக்கல்லூரிகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 132 அரபுக் கல்லூரிகள் பதிவு செய்யப்படாது இயங்கி வருகின்றன. 32 அரபுக்கல்லூரிகள் பதிவு செய்யப்பட்டும் இயங்காமலிருக்கின்றன. இந்த எண்ணிக்கையையே 50க்கும் 75க்கும் இடையில் மட்டுப்படுத்தும்படி கோரப்பட்டுள்ளது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் ‘விடிவெள்ளி‘க்குத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அரபுக்கல்லூரிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ‘பாராளுமன்ற கண்காணிப்புக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபார்சுகளில் அரபுக்கல்லூரிகள் 50க்கும் 75 க்கும் இடையில் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கண்காணிப்புக் குழுவில் இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கம் வகித்தனர். பாராளுமன்ற கண்காணிப்புக்குழு தனது சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையை 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலும், ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையை 2020 மே மாதத்திலும் வெளியிட்டிருந்தது.
அரபுக்கல்லூரிகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற அரசின் கோரிக்கைக்கு நாங்கள் எமது ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கிவரும் முன்னணி அரபுக்கல்லூரிகளுடன் அப்பகுதியிலுள்ள சிறிய அரபுக்கல்லூரிகள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அப்போது எண்ணிக்கையை மட்டுப்படுத்தலாம்.
அத்தோடு அரபுக் கல்லூரிகளுக்கு பொதுவான பாடதிட்டம், பொதுவான பரீட்சை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஆங்கிலம் கட்டாயமாக போதிக்கப்பட வேண்டுமென நாங்கள் கூறியிருக்கிறோம்.
அரபுக்கல்லூரிகளை மட்டுப்படுத்துவது தொடர்பில் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழு ஆலோசித்து வருகிறது.
தற்போது எமக்குள்ள பிரச்சினை என்னவென்றால் பதிவு செய்யப்பட்ட அரபுக்கல்லூரிகளில் பல முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு உரிய தகவல்களை, உண்மையான தகவல்களை வழங்குவதில்லை. கல்லூரிகளில் என்ன படித்துக் கொடுக்கப்படுகிறது. கல்லூரிக்கு நிதியுதவி எங்கிருந்து கிடைக்கிறது எனும் விபரங்கள் வழங்கப்படுவதில்லை.
அரபுக்கல்லூரிகளை மறுசீரமைத்தல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நாங்கள் 34 பேர் அடங்கிய குழுவொன்றினை நியமித்துள்ளோம். இக்குழுவில் பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ள உலமாக்கள், மெளலவிகள், அரபுக்கல்லூரிகளில் ஆசிரியர்களாக நீண்ட காலம் அனுபவமுள்ளவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரபுக் கல்லூரிகளின் விரிவுரையாளர்கள் உள்ளடங்குகின்றனர். இக்குழு ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
பாராளுமன்ற கண்காணிப்புக் குழுவில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் அங்கம் வகித்தார்கள். இக்கண்காணிப்புக்குழு பதிவு செய்யப்படாத குர்ஆன் மத்ரஸாக்கள் மூடப்பட வேண்டும் எனவும், மக்தப் கல்வி முறைமை நிறுத்தப்பட வேணடுமெனவும் பரிந்துரைத்துள்ளது.
அத்தோடு அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு பாடசாலைக்கல்வி கட்டாயம் என சிபாரிசு செய்துள்ளது. 5 வயது முதல் 15 வயது வரை மாணவர்களுக்கு பாடசாலைக்கல்வி கட்டாயமாகும். சனி, ஞாயிறு தினங்களில் அரபுக்கல்லூரி பாடநெறிகள் வழங்கப்பட வேண்டும். அல்லது 16 வயதில் அரபுக்கல்லூரி பாடத்திட்டம் வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற கண்காணிப்பு குழுவும் , ஜனாதிபதி ஆணைக்குழுவும் பரிந்துரைத்துள்ளன.
அரபுக் கல்லூரிகள் மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம்
அரபுக்கல்லூரிகளை மறுசீரமைப்பது தொடர்பான கூட்டமொன்று நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு மென்டரீனா ஹோட்டலில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி கலந்துகொண்டார்.
மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.இஷாக், அலிசப்ரி ரஹீம், வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன், அரபுக்கல்லூரிகள் மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி அஸ்ஹர் அஸாஹிம், குழு உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, சூபி தரீக்கா பீடம், ஷரீஆ கவுன்ஸில், சூரா கவுன்ஸில், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான இரண்டாம் கட்ட கூட்டமொன்று ரமழானுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்படும் என பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் தெரிவித்தார்.- Vidivelli
Ayyo ayyo
ReplyDeleteதன் இனத்துக்கே குழி வெட்டும் பதவி ஆசை பிடித்த ........கள்
ReplyDeleteதனித்தனிக் கொள்கைகளும் அதற்கென்று தனித்தனி மதரசாக்களும் இல்லாமல் செய்யப்பட வேண்டும். பொதுக்கொள்கையும் ஒழுக்கமும் பேணப்பட வேண்டும். ஒழுங்கு படுத்தல் மிக மிக அவசியம்.
ReplyDeleteIndia behind of this fool givt.
ReplyDelete