சீமெந்தின் விலை 350 ரூபாவினால் அதிகரித்து, 1,850 வரை உயர்ந்தது
இறக்குமதி செய்யப்படுகின்ற மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 50kg சீமெந்துப் பொதியின் விலை ரூ. 1,850 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களினால் இன்றையதினம் (13) குறித்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
டொலரின் பெறுமதி அதிகரிப்பு, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, துறைமுகக் கட்டணம், கொள்கலன் போக்குவரத்துக் கட்டணங்கள், உற்பத்திச் செலவு ஆகியவற்றின் அதிகரிப்பு காரணமாகவும் 50 கி.கி. சீமெந்து பொதியின் விலை ரூ. 350 இனால் அதிகரிக்கப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அந்நியச் செலாவணி, டொலர் கையிருப்பு போன்ற விடயங்கள் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.
இதன் விளைவாக, கட்டுமானத் துறை, வாகனங்கள் மற்றும் தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களின் விலைகள் மற்றும் உணவுகளின் விலைகளும் அதிகரித்துள்ளதோடு, எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக, பஸ் கட்டணங்களையும் அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டொலர் பெறுமதி அதிகரிப்பின் விளைவாக எரிவாயு விலைகளும் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment