சம்மாந்துறைக்குள் புகுந்து யானை அடாவடி, ஓர் இரவுக்குள் 12 இடங்கள் அடித்து நொறுக்கம் - வீதி விளக்குகள் அணைப்பதால் விபரீதம்
- ஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹுதா உமர் -
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள 4 கிராம சேவையாளர் பிரிவுகளில் மொத்தமாக 12 இடங்களை யானை சேதப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) அதிகாலை இரண்டு மணியளவில் இடம்பெற்றதாகவும். சம்மாந்துறையில் உள்ள பல இடங்களிலும் உள்ள சுற்றுமதில் மற்றும் நுழைவாயில்களையும் அடித்து நொறுக்கியிருப்பதாகவும், இந்த யானை நெற் களஞ்சிய சாலையில் புகுந்து அங்கிருந்த நெல் மூட்டைகளையும் சாப்பிட்டு விட்டு சென்றுள்ளதாவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக இரவு நேரங்களிலும் வீதி விளக்குகள் அணைக்கப்படுகிறது.ஆகவே யானைகள் ஊர்களுக்குள் நுழைவதாகவும்,ஊரினுள் திருடர்கள் கூடுதலாக உலாவித்திருவதாகவும் மக்கள் பெரும் அச்சத்துடனும் கவலையுடனும் இரவில் உறங்குவதாகவும் மேலும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சம்மாந்துறை பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் அஸாறுடீன் அவர்களை தொடர்பு கொண்ட போது....
சம்மாந்துறை கல்லரிச்சல் 2 கிராம சேவையாளர் பிரிவில் 2 இடங்களிலும்,புளேக் ஜே கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் 4 இடங்களிலும், மலையடி கிராமம் 2 கிராம சேவையாளர் பிரிவில் 5 இடங்களிலும்,விளினையடி 1 கிராம சேவையாளர் பிரிவில் 1 இடத்திலும் மொத்தமாக இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலில் படி 12 இடங்களை யானை சேதப்படுத்தியுள்ளதாகவும் உயிர் ஆபத்துக்கள் ஏதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்டயீடுகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் தலையிட்டு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Post a Comment