Header Ads



இலங்கையில் இணைய சேவைகள் பாதிக்கப்படுமா..? கடலுக்கு அடியிலான கட்டமைப்பில் கோளாறு


இந்து சமுத்திரத்தில் கடலுக்கு அடியில் காணப்படும், இணையத்தள வசதியை வழங்கும் சர்வதேச நீர்மூழ்கி கேபள் (submarine cable) கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வதேச நீர்மூழ்கிக்  கேபிள் அமைப்பானது உலகின் பல்வேறு நாடுகளுக்கு தேவையான இணைய வசதிகளை இணைக்கிறது.

வங்காள விரிகுடாவை அண்டிய கடற்பகுதியில் ஆழ்கடலில் பதிக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி வடத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அவ்வப்போது கைப்பேசி மற்றும் அகன்ற அலைவரிசை (ப்ரோட்பேண்ட்) இணைய இணைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என கைப்பேசி சேவை வழங்குநர் நிறுவனமொன்று அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த தொழிநுட்பக் கோளாறை சீர்செய்வதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதை மதிப்பிட முடியாது எனவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த சர்வதேச நீர்மூழ்கிக் கேபளானது சிங்கப்பூரில் இருந்து மலேசியாவின் பென்னாங், இலங்கை, சென்னை மற்றும்  மும்பை மற்றும் ஓமானின் பர்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா ஆகிய  மத்திய நிலையங்கள் ஊடாக இணைய சேவைகளுக்கான இணைப்பு வசதிகளை வழங்குகிறது.

No comments

Powered by Blogger.