Header Ads



மு.கா. ம.கா, எமது வாக்குகளைப் பெற்று, அரசாங்கத்தில் இணைகின்றனர் - எமது கட்சியின் பலம் மலினப்படுத்தப்படுகிறது


எந்தவொரு தேர்தலாயினும் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி கிழக்கு மாகாணத்தில் தனித்தே போட்டியிடுமென்று கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.  ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுடனான விசேட கலந்துரையாடல் கல்முனை பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்முனைத் தொகுதி அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.அப்துர் ரஸ்ஸாக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொழில் சங்கத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முஜீபுர் ரஹ்மான், கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மஹ்றூப், பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான புத்திக பத்திரன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரதாச கலப்பதி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவிக்கையில்;

இனிவரும் காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி விட்ட தவறுகளை ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் செய்யமாட்டாது. நாட்டிலுள்ள 160 தொகுதிகளுக்கும் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அந்தந்த தொகுதி அமைப்பாளர்களே பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக நியமிக்கப்படுவர். கட்சி சம்பந்தப்பட்ட எந்த வேலைத் திட்டமாயினும் அமைப்பாளர் ஊடாகவே முன்னெடுக்கப்படும்.

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் எம்முடன் இணைந்து எமது வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்டு, எமது ஆதரவாளர்களினதும் வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்ற பின்னர் அவர்கள் அரசாங்கத்தில் இணைந்து விடுகின்றனர். இதனால் பாராளுமன்றத்தில் எமது கட்சியின் பலம் மலினப்படுத்தப்படுகிறது. மாற்றுக் கட்சியினருக்கு வாய்ப்பளிப்பதால் எமது கட்சி ஆதரவாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது பற்றி இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இனிவரும் எந்தவொரு தேர்தலிலும் இவ்வாறான தவறுகள் நடக்க இடமளிக்க மாட்டோமென்று உறுதியளிக்கிறேன். இது விடயத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மிகவும் உறுதியாக இருக்கிறார் என்றார்.

கல்முனை விசேட நிருபர்

2 comments:

Powered by Blogger.