ஞானசாரர் முன் அலி சப்ரி, துணிச்சலுடன் தெரிவித்த கருத்துக்கள்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான செயலணி முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் இலக்கு வைப்பதற்காக ஜனாதிபதியினால் நிறுவப்படவில்லை. நாட்டில் பல்வேறு தனியார் சட்டங்கள் அமுலிலுள்ளன.
இந்நிலையில் முஸ்லிம் தனியார் சட்டத்தை மாத்திரம் இலக்கு வைப்பது பொருத்தமற்றது என நீதியமைச்சர் அலிசப்ரி கடந்த சனிக்கிழமை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான செயலணியுடனான கலந்துரையாடலில் தெரிவித்தார்.
நீதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளருமான கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட செயலணியின் உறுப்பினர்கள் ஏழுபேர் கலந்து கொண்டிருந்தனர். இதில் முஸ்லிம் உறுப்பினர் ஒருவரும் கலந்து கொண்டிருந்தார்.
கலந்துரையாடலில் நீதியமைச்சர் அலிசப்ரி தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதியின் எண்ணக்கரு தொடர்பில் ஆராய்ந்து ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் ஓர் இக்கட்டான நிலைக்குத் தள்ளிவிடும் வகையில் ஆலோசனைகளையும் சிபாரிசுகளையும் வழங்குவதற்காக அல்ல.
முஸ்லிம் தொடர்பான விவகாரங்கள் முஸ்லிம் சமுதாயத்தின் கருத்துகளையும் பெற்றுக் கொண்டதன் பின்பு எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலே கையாளப்படவேண்டும். இச்செயலணி ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்கு மாத்திரமே நிறுவப்பட்டுள்ளதே ஒழிய சட்டம் இயற்றுவதற்காக அல்ல.
சட்டம் அல்லது சட்ட திருத்தங்கள் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்பு சட்ட வரைபு திணைக்களத்துக்கு அனுப்பப்படும். அதன்பின் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படும். சட்டமா அதிபரின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்பு மீண்டும் அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவேண்டும். அதன்பின்பு குறித்த சட்டம் அல்லது சட்டதிருத்தங்கள் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்பும்கூட எதிர்ப்புகள் இருந்தால் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் அதுவே நடைமுறையாகும்.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி முஸ்லிம்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டதொன்று அல்ல என்றார்.
வக்பு சபைத் தலைவர்
வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீனும் கலந்துரையாடலில் பங்கு கொண்டிருந்தார். வக்பு சபைத் தலைவரிடம் ஞானசார தேரரினால் சில விளக்கங்கள் கோரப்பட்டன.
நாட்டில் பல பகுதிகளில் வரலாற்று புகழ்வாய்ந்த ஸியாரங்கள் மூடப்பட்டுள்ளதாக சூபி முஸ்லிம்கள் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியிடம் புகார் செய்துள்ளார்கள். இந்த ஸியாரங்கள் மீண்டும் திறக்கப்படவேண்டும் என ஞானசார தேரர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் பதிலளிக்கையில் வக்பு சபைக்கென சில சட்ட ஒழுங்கு விதிகள் உள்ளன. அதன்மூலமே இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். முஸ்லிம்களுக்கிடையில் நிலவும் இவ்வாறான பிரச்சினைகளை நாங்களே கலந்து பேசி தீர்த்துக் கொள்கிறோம். எங்களுக்குள் நிகழும் இவ்வாறான சிறிய பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்ளலாம் என ஆராய்ந்து வருகிறோம் என்றார். Vidivelli
Post a Comment