போதைப்பொருள் கடத்தல் வியாபாரி ருவானின் 79 கோடி பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் கண்டுபிடிப்பு
பல கோடி ரூபாய் சொத்துக்கள்: 30 கோடி பெறுமதியான 9 கார்கள்! போதைப் பொருள் வியாபாரி தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள் (Photos)
மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் வியாபாரி எனக் கூறப்படும் தெமட்டகொடை ருவான் என்பவர் போதைப் பொருள் வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்துள்ள சொத்துக்களின் பெறுமதி 79 கோடி என குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் போதைப் பொருள் வியாபாரியிடம் இருந்து கைப்பற்றிய அதிகளவில் பெறுமதியான சொத்துக்கள் வெலே சுதாவுக்கு சொந்தமானது எனவும் அவற்றின் பெறுமதி 18 கோடி ரூபாய் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
2011 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை சம்பந்தமாக கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அங்கு அறிமுகமான பாகிஸ்தான் பிரஜையின் ஊடாக தெமட்டகொடை ருவான், 2017 ஆம் ஆண்டு முதல் பெருமளவில் இலங்கைக்கு ஹெரோயின் போதைப் பொருளை கடத்தியுள்ளார்.
அதன் மூலம் சம்பாதித்த பணத்தில், 9 கோடியே 75 லட்சம் பெறுமதியான ரோன்ஜ் ரோவர் கார், 7 கோடி ரூபாய் பெறுமதியான பீ.எம்.டப்யூ கார், 5 கோடியே 50 லட்சம் ரூபாய் பெறுமதியான பீ.எம்.டப்யூ கார் 7 சீரியஸ் கார் உட்பட பெறுமதியான 9 கார்களை கொள்வனவு செய்துள்ளார்.
தெமட்டகொடை ருவானின் மகனது பிறந்த நாள் ஒக்டோர் 10 ஆம் திகதி என்பதால், அதற்கு பொருத்தமான 4 இலக்கங்களை பணம் கொடுத்து பெற்று சில வாகனங்களை பதிவு செய்துள்ளார்.
30 கோடி ரூபாய் பெறுமதியான வாகனங்களுக்கு மேலதிகமாக 16 கோடி ரூபாய் பெறுமதியான ஆடம்பர வீட்டுடன் கூடிய மூன்று காணிகள், இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான ஒன்றரை கிலோ தங்க ஆபரணங்கள், 9 கோடி ரூபாய் சில நிலையான வங்கி வைப்பு கணக்குகள் என்பன அடங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வங்கி கணக்குகளை பொலிஸார் முடக்கியுள்ளனர். இவற்றை தவிர போதைப் பொருள் வியாபாரம் மூலம் சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்த சில சுற்றுலா விடுதிகள் சம்பந்தமாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
சந்தேக நபரான தெமட்டகொடை ருவான், தனது சொத்துக்கள் சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளை நிறுத்த, விசாரணை அதிகாரிகளுக்கு 5 கோடி ரூபாய் லட்சம் கொடுக்க முயற்சித்துள்ளார். எனினும் அதிகாரிகள் அதனை நிராகரித்துள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment