முஸ்லிம் சமூகத்தை நோக்கி, நீதிபதி அப்துல்லாவின் அணல் பறக்கும் கேள்விகள்..!
-பி. முஹாஜிரீன்-
உலக வரலாற்றில் எல்லாத் துறைகளிலும் முஸ்லிம்கள் சிறந்து விளங்கினர். மருத்துவம், அறிவியல், வானவியல், பொறியியல் போன்ற துறைகளை அறிமுகம் செய்தவர்களாக முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். ஆனால் தலைமைத்துவக் கட்டுப்பாடு இழக்கப்பட்டதனால், இஸ்லாம் போதித்த நன்னெறிகள் முஸ்லிம்களிலிருந்து தூரமாகியதால் ஆட்சி அதிகாரங்கள் மட்டுமன்றி அறிவியல் சார் வளர்ச்சிகளும் தடைப்பட்டன என மட்டக்களப்பு மேலதிக மாவட்ட நீதிமன்ற நீதவான் என்.எம்.எம். அப்துல்லா தெரிவித்தார்.
பாலமுனை அல்-அறபா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அல் ஹாபிழ் கௌரவிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (06) மாலை பாலமுனை இப்னு சீனா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நீதவான் என்.எம்.எம். அப்துல்லா தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான அறபுக் கல்லூரிகளும் மத்ரஸாக்களும் இருந்தும் அவை இந்த சமூகத்தின் முன்னேற்றத்துக்காக எவற்றைச் சாதித்துள்ளன என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா என்பதை முஸ்லிம் புத்திஜிவிகள் சிந்திக்க வேண்டும்
முஸ்லிம்களின் கொடுக்கல் வாங்கல், நம்பகத் தன்மை, ஒழுக்க விழுமியங்கள், முன்மாதிரி போன்ற விடயங்கள் சீரின்றிக் காணப்படுவதால் முஸ்லிம் சமூகத்தின் மீதான நல்லெண்ணம் பறிபோய் உள்ளதுடன் முஸ்லிம்களும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளனர். இவ்வாறான நிலைமைக்க பொறுப்புக் கூறுபவர்கள் யார்? உலமாக்களா அரசியல் வாதிகளா கல்வி மான்களா என்று பார்த்தால் சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்பினருமே இதற்குப் பொறுப்பாளிகள்.
அல்குர்ஆனை நாமே இறக்கினோம். அதனை நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் கூறுகிறான். அவ்வாறு பாதுகாக்கின்ற ஒரு வடிவம்தான் அல் ஹாபிழ்கள். அதற்காக நாம் வெறுமனே குர்ஆனை மட்டும் மனனமிடுகின்றவர்களை உருவாக்கும் மத்ரஸாக்களை விட ஒரு ஹாபிழ் ஒரு விஞ்ஞானியாக, ஆய்வாளராக, கண்டுபிடிப்பாளராக வரக்கூடிய வகையிலான வழிகாட்டல்களுடன் அர்களை உருவாக்க வேண்டும்.
ஓவ்வொரு ஊரிலும் நூற்றுக் கணக்கான ஆலிம்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு சுபஹ_த் தொழுகையிலும் சொற்ப அளவான மக்களே கலந்து கொள்கின்றனர். அப்படியானால் இந்த அறபுக் கல்லூரிகளினதும் ஆலிம்களினதும் பணிகள் சமூகத்தில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்துகின்றன என்பதைச் சிந்திக்க வேண்டும். வெறுமனே பேருக்காக ஹாபிழ்களையும் ஆலிம்களையும் உருவாக்குவதை விட இந்த முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றி கவலைப்படுகின்ற, இஸ்லாம் முற்காலத்தில் பெற்றிருந்த அறிவியலையும் ஆட்சியதிகாரத்தையும் பெறக்கூடியதான சகல விடயங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களை உருவாக்குவதே இன்று எம்முன்னுள்ள பணியாகும்.
சமயத் தலைவர்கள் சமூகத்தின் வழிகாட்டியாக செயற்பட வேண்டும். ஒரு கிராமத்தின் வளர்ச்சியும், சமூகத்தின் வளர்ச்சியும் அக்கிராமத்தில் உருவாகின்ற கல்வியாளர்களிலேயே தங்கியுள்ளது. முஸ்லிம் சமூகம் நமது நாட்டில் பல கல்வியாளர்களை உருவாக்கி அதன் மூலம் நாட்டிற்கும், சமூகத்திற்கும் பெரும் பங்களிப்பினை வழங்கி வருகின்றது. ஒரு சமூகத்தின் எதிர்கால வழிகாட்டியாக திகழ்வின்ற பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் கரிசனையுடன் செயற்பட வேண்டும். அப்போதுதான் அச்சமூகம் எதிர் பார்க்கின்ற இலக்கை அடைய முடியும்.
சமயத் தலைவர்கள் தமது ஆளுமையை வளர்த்து சமூகத்தை வழிநடாத்தும் அறிவாற்றல் உள்ளவர்களாக மற வேண்டும். இதன் மூலம் சமூகம் வளரும். இஸ்லாமிய ஆட்சி உலகில் வியாபித்திருந்த காலப்பகுதியில் இந்தியாவை 700 ஆண்டுகளும் ஸ்பெய்னை 750 ஆண்டுகளும் முஸ்லிம்கள் ஆண்டனர். மருத்துவம், விஞ்ஞானம், வரலாறு ஆகிய துறைகளில் முஸ்லிம்களின் புகழ் ஓங்கிக் கணப்பட்டது. தற்போதய சமூகத்;தில் அவை குறைந்து காணப்படுகின்றது.
நாம் இன்று தொழிநுட்ப அபிவிருத்தி அடைந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இளமைப் பருவத்தினை நல்ல முறையில் கொண்டு சென்றால் எதிர்காலத்தில் நாட்டிற்கு தேவையான புத்திஜீவியாகவும், சிறந்த கல்விமானாகவும் வரமுடியும் என்றார். இதன்போது, 10 ஹாபிழ்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
Great advice 4 our society.each and every muslim must think about this matter.
ReplyDeleteகோடான கோடி விளக்கம் அடங்கியுள்ளன ஊருக்கு ஊர் நூற்றுக்கணக்கான உலமாக்கள் ஆனால் பேர் தாங்கிகளே அதிகம்
ReplyDelete