Header Ads



விக்னேஸ்வரன் தற்போது, தனி வழியில் போகிறார் - சம்பந்தன் கவலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வேற்றுமையை ஏற்படுத்துவதன் ஊடாக அரசியல் தீர்வினை தவிர்த்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கத்தில் உள்ள எவரேனும் முயற்சிக்கலாம். இதற்கு நாங்கள் பலியாகக் கூடாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள தமிழ் அரசுக் கட்சி பணியகத்தில் நேற்றுமுன்தினம் மாலை, கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு கருத்து வெளியிட்ட அவர், “கட்சிக்குள் முரண்பாடு உள்ளதுதான். இல்லை என்பதற்கு இல்லை. ஆனால் முரண்பாடுகள் அனைத்தும் கட்சிக்கு வெளியில் செல்லக் கூடாது. அனைத்து விடயங்களும் உள்ளுக்குள் பேசித்தீர்க்கப்பட வேண்டும்.

ஜனநாயக கட்சி என்ற ரீதியில் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். அது ஒருபெரிய விடயமல்ல. ஆனால் அவை ஊடகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

சுமந்திரனைப் பற்றியும் முதலமைச்சரைப்பற்றியும் இங்கு பேசப்பட்டது. அவர்களுக்குள் முரண்பாடுகள் உள்ளதுதான். இல்லை என்பதற்கில்லை.அது தற்போதும் இருக்கின்றது.

முரண்பாடு ஏற்பட்டமைக்கான காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக ஆதரிக்கவில்லை என்பது தான்.

அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக இலங்கைத் தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எனவே அந்த கட்சியை ஆதரிப்பதற்கு அவருக்கு ஒரு கடமை இருக்கிறது.

ஆனால் அவர் ஆதரிக்கவில்லை. ஆதரிக்காமல் விட்டது மாத்திரமல்ல, நான் மௌனியாகப் போகின்றேன், ஊமையாகப் போகின்றேன் என்றெல்லாம் சொல்லிவிட்டு அவர் விடுத்த அறிக்கைகள் வேறொரு கட்சிக்கு ஆதரவளிப்பதாக அமைந்ததாக ஒரு கருத்து இருக்கிறது.

இதனால் தான் இந்த முரண்பாடு ஏற்பட்டது.  தமிழரசுக் கட்சிக் கூட்டத்தில் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கருத்தினை கூட சுமந்திரன் முன்வைத்திருந்தார். இதனை நான் பேசித்தீர்த்துக் கொள்வோம் என கூறியிருந்தேன்.

இந்நிலையில் சுமந்திரன் அவுஸ்ரேலியாவுக்கு சென்றபோது இந்தவிடயம் தொடர்பாக ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அவ்வாறு ஊடகத்தில் பதிலளித்திருக்கக் கூடாது. கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய பிறகு அவர் அதனை ஊடகத்தில் பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

சில சமயம் ரணில் விக்கிரமசிங்கவோ,அல்லது ஆட்சியில் உள்ள வேறு நபர்களோ எங்கள் மத்தியில் சிறு சிறு விடயம் சம்பந்தமாக  வேற்றுமையை ஏற்படுத்துவதன் ஊடாக அரசியல் தீர்வினை தவிர்த்துக் கொள்ளலாம். இதற்கு நாங்கள் பலியாகக் கூடாது. அவதானமாக இருக்க வேண்டும்.

விக்னேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம். அது அவரது உரிமை. இதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமேயாகும்.  நாங்கள் ஆத்திரப்பட வேண்டிய அவசியம் இல்லை.

அவருக்கு ஆதரவாக குப்பைத் தொட்டியில் போடப்பட்ட ஆனந்தசங்கரியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்  இருக்கின்றனர். இதனால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

அவரை முதலமைச்சராக்கியது நான், அவரை முதலில் போய் கேட்டது நான். எமது கட்சி கூடி முதன்முதலாக பேசியபோது அவருக்கு  கட்சிக்குள் எவரும் ஆதரவாக இருக்கவில்லை.

மாவை சேனாதிராஜா மௌனம் சாதித்தார். இறுதி நேரத்தில்  அண்ணனின் கருத்தோடு நீங்கள் அனைவரும் ஏற்று வந்தால் அவரைத்தான் நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அது அவரின் பெரும் தன்மை.

இதன் பின்னர் அனைவரும் கூடி எடுத்த முடிவின் பிரகாரமே நாங்கள் நியமித்தோம். ஆனால் அவர் தற்போது தனி வழியில் போய்க் கொண்டு இருக்கிறார்.

நான் அவரை நிறுத்த மாட்டேன். இது மக்களின் முடிவு. நான் இந்த பதவியில் இருப்பது மக்களின் முடிவு. ஐயா நீங்கள் போக வேண்டும் விக்னேஸ்வரனை வைக்க போகின்றோம் என்றால் உடனடியாக அதனை நான் ஏற்றுக் கொள்வேன் என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.