Header Ads



2 வருடத்திற்குள் முஸ்லிம்களை மீள்குடியேற்றாவிட்டால், அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிவேன் - ரிஷாத்

வடக்கில் அடுத்த இரு வருடங்களுக்குள் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். இல்லையேல் அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு அரசுக்கு எதிராகப் போராடுவேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் சூளுரைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (05) சனிக்கிழமை இடம்பெற்ற கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சூளுரைத்த அவர் மேலும் கூறுகையில்,

எனக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டாம் எனவும், வன்னி அபிவிருத்தியில் என்னை இணைக்க வேண்டாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கூறியுள்ளனர்.

அவ்வாறு நான் அமைச்சராக வன்னி அபிவிருத்திக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு ஏதாவது கொடுத்து விடுவேன் என்பதற்காகவே இவ்வாறு கூறியுள்ளனர்.

முஸ்லிம்கள் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வஞ்சனை செய்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசுகின்றனர்.

எனவே, நான் அரசுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கின்றேன். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் வடக்கில் முஸ்லிம்கள் மீளக் குடியமர்த்தப்படவேண்டும்.

ஜனாதிபதியும், பிரதமரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பயந்து இதனை செய்யத் தவறுவார்களேயானால் எனது அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிந்து விட்டு நானும் எனது கட்சியும் அரசுக்கு எதிராகப் போராடுவோம் என்றார்.

No comments

Powered by Blogger.