''கொழும்பில் பாதுகாப்பு'' நாளை காலை 9 மணிமுதல் 11 மணிவரை வேட்பு மனுக்கள் ஏற்கப்படும்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று 07-12-2014 நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
இதன்படி 17 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், 2 சுயேட்சை வேட்பாளாகளும் தங்களின் கட்டுப்பணத்தை செலுத்தி இருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை ஏற்கும் நடவடிக்கை நாளை 08-12-2014 இடம்பெறவுள்ளது.
நாளை காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரையான இரண்டு மணித்தியாலங்களில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளையதினம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தேர்தல் திணைக்களம் அமைந்துள்ள ராஜகிரிய உள்ளிட்ட கொழும்பு நகரில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இதற்காக விசேட போக்குவரத்து விதிமுறைகள் அமுலாக்கப்படவுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 1.30 வரையில், ஆயுர்வேத சுற்று வட்டம் முதல் வெலிகட சந்தி வரையான நாடாளுமன்ற வீதியிலும், ஆயுர் வேத சுற்று வடத்தில் இருந்து வெலிக்கடை வரையான கொட்டா வீதியிலும் வாகன போக்குவரத்து ஒரு ஒழுங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த காலப்பகுதியில் குறித்த பாதைகளின் ஊடாக சிறிய ரக வாகனங்கள் மற்றும் பயணிகள் பேருந்துகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என்றும் கனரக வாகனங்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment