'நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக, ரணில் வருவதென்பது கனவிலும் நடக்காது, 2021ம் வரை மஹிந்ததான்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் விடுதலைப் புலி ஆதரவாளராக செயற்படுவதாக மேல்மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தரும், மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில கொழும்பில் தனியார் நிகழ்வொன்றில் கலந்து கொண்டார்.
அதன் போது அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2001 மற்றும் 2003 ஆண்டுகளில் இந்நாட்டையே காட்டிக் கொடுக்கும் அளவுக்கு அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தார். அவரது துரோகங்களை இலகுவில் மறந்துவிடவோ, மன்னிக்கவோ முடியாது.
தற்போது கூட அவர் நாட்டு மக்களின் நலன் தொடர்பில் கவலைப்படுவதாக தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் நலன், இந்திய நலன் தொடர்பில் தான் அவர் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரை இந்தியா தனது தூதுவராக வேறொருவரை இங்கு அனுப்பத் தேவையில்லை. அந்த விடயத்தை மிகச் சிறப்பாக ரணில் விக்கிரமசிங்க கவனித்துக் கொள்வார்.
இவ்வாறான நிலையில் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக ரணில் வருவதென்பது கனவிலும் நடக்காது. 2021ம் ஆண்டு வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பதவியில் இருப்பார்.
அதிலும் ரணிலின் தலைமையில் இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல்களில் படுதோல்வியையே சந்திக்கும். எனவே கௌரவமான தோல்வியைத் தழுவ வேண்டுமாயின் ரணிலின் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்றும் உதய கம்மன்பில தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
Post a Comment