நடுவானில் பாராசூட் விரியாததால்..!
அமெரிக்காவில் கின்னஸ் சாதனைக்காக பாராசூட் மூலம் கீழே குதிக்கும் சாகச நிகழ்ச்சி நடந்தது. பெண் ஸ்கை டைவரின் பாராசூட் விரியாததால் தரையில் விழுந்து உடல் சிதறி பலியானார். இதனால் சோகம் ஏற்பட்டது. அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் 28 நாடுகளை சேர்ந்த 222 ஸ்கை டைவிங் வீரர்கள், வீராங்கனைகள், விமானத்தில் இருந்து வானில் குதித்து, பாராசூட் மூலம் கீழே வந்தடைவதற்குள் பல்வேறு உருவங்களை உருவாக்கி புதிய கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடத்தினர். இவர்கள் குழுவில் ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரை சேர்ந்த டயானா பாரீஸ் (46) என்பவரும் இருந்தார். அரிசோனாவின் எலாய் என்ற இடத்தில் இரு தினங்களுக்கு முன்பு இவர்கள் அனைவரும் திட்டமிட்டபடி அனைவரும் விமானத்தில் இருந்து கீழே குதித்தனர்.
சாகசத்தை காண நூற்றுக்கணக்கான மக்களும் அங்கு திரண்டிருந்தனர். ஆனால் இவர்களுடன் தரையிறங்க வேண்டிய டயானா மட்டும் தனியே தரையை நோக்கி சென்று கொண்டிருந்ததை கண்டு சக வீரர்கள் நடுவானில் அலறினர். டயானாவின் பாராசூட் வானில் விரியவில்லை.
சுமார் 18 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பார்வையாளர்கள் கண்ணெதிரிலேயே டயானா கிழே விழுந்து உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். அதை கண்டு ஸ்கை டைவ் குழுவினர் கதறி அழுதனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் குல்சின் ஹில்பர்ட் கூறுகையில், எங்களது தோழியை இழந்தது வருத்தத்துக்கு உரியதுதான். அவருக்கு இணையாக யாரையும் கருத முடியாது. எனவே அவருக்கு பதில் வேறு யாரையும் எங்கள் குழுவில் சேர்க்கும் எண்ணம் இல்லை. இறந்து போன டயானாவின் கனவை நிறைவேற்றும் வகையில் மீதமுள்ள அனைவரும் இந்த சாகசத்தை மீண்டும் செய்து முடிப்போம். தொடர்ந்து பயிற்சி நடக்கும் என்றார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment