Header Ads



அமைச்சர் டிலான் பெரேராவின் தலையை சோதிக்கப்போகும் ஞானசார தேரர்

சட்டத்தை மதிப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார். ஞானசார தேரர் இன்று கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் ஆஜராகினார். ஜாதிக பலசேனா அமைப்பின் செயலாளர் வட்டரெக்க விஜித தேரரின் முறைப்பாட்டுக்கு அமையவே அவர் பொலிஸில் ஆஜரானார்.

தாம் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பொன்றில் அனுமதியின்றி புகுந்த ஞானசார தேரர் உட்பட அவரது அமைப்பினர் குழப்பும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் விஜித தேரர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற ஞானசார தேரர், வாக்குமூலம் வழங்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதன் போது ஊடகங்களிடம் பேசிய அவர், தான் நாட்டின் சட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்படுவதாக குறிப்பிட்டார்.

அமைச்சர் டிலான் பெரேராவை பிச்சைக்காரன் என விமர்சித்த ஞானசார தேரர்

சிங்களவர்களுக்கு எதிரான ஒரு சட்டமும், முஸ்லிம்களுக்கு தனியான விசேடமான சட்டமும் செயற்படுத்தப்படுமாயின், அதனை தாம் எதிர்ப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் இன்று ஆஜரான பின்னர் ஊடகங்களில் கருத்து வெளியிடும் போதே இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மொஹமட் வட்டரெக்க விஜித என்ற காவி உடை அணிந்தவர். அவர்  முஸ்லிம் பள்ளிவாசலில் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் என்பதே சரியானது. நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடிய மேடையை நாங்கள் ஏற்படுத்தியுள்ளேம் என்றார்.

அதேவேளை அமைச்சர் டிலான் பெரேரா, வட்டரெக்க விஜித மற்றும் ஞானசார தேரர்கள் மன நோயாளிகள் எனவும் அவர்கள் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் எனவும் கூறியிருந்தமைக்கு பதிலளித்த ஞானசார தேரர்,

நாட்டின் ஐக்கியத்தை சிதைத்து நாட்டை கூறு போடும் தரப்பிலும் விடுதலைப் புலிகளை செல்லம் கொஞ்சிய தரப்பிலும் இருந்த டிலான் பெரேரா போன்றவர்கள் அமைச்சுக்களில் இருந்து கொண்டு தற்போது கூக்குரல் இடுகின்றனர்.

யார் இவர்கள்?. இவர்கள் அமைச்சர்களாக?.பிச்சைக்காரர்கள். நானும் வட்டரெக்க விஜித தேரரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாம்.

நாங்கள் கால்நடை மருத்துவருடன் நாளைய தினம் அமைச்சர் டிலான் பெரேராவின் தலையை சோதித்து பார்க்க வருவோம்.

கால்நடை மருத்துவருடன் சென்றால், இவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஆணுமில்லாத பெண்ணும் இல்லாத இவர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று முழு இனத்தையும் கோழைகளாக மாற்றியுள்ளனர் என்றார்.

No comments

Powered by Blogger.