'நல்லாட்சிக்கான தேசிய முன்னனியினர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை வரவேற்கிறேன்' றிசாத் பதியுதீன்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மன்னார் மாவட்ட மறிச்சிக்கட்டி மீள் குடியேற்றக்கிராமத்திலுள்ள மரைக்கார் தீவு பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் கண்டறிவதற்கான கள விஜயம் ஒன்றினை நேற்று (5-4-2014) நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் தலைமைத்துவ சபையினர் மேற்கொண்டனர்.
வட மாகாணத்தின் பல்வேறு பிரதேச முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரில் கண்டறிவதற்கென நல்லாட்சிக்கான தேசிய முன்னனி மேற்கொண்ட மூன்று நாள் கள விஜயத்தின் ஒரு பகுதியாகவே மரைக்கார் தீவிற்கான நேற்றைய விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்விஜயத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் (நளீமி), அஷ்ஷெய்க் எம்.ஆர்.நஜா முஹம்மத் (இஸ்லாஹி), பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான், வட மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப், சகோ.சிராஜ் மஸ்ஹூர், சகோ.முஜீபுர் ரஹ்மான், சகோ.ஹானான், சகோ.ஸப்ரி மற்றும் சகோ.சறூக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மூன்று பிரிவுகளை உள்ளடக்கிய மறிச்சிகட்டி கிராமத்தின் ஒரு பகுதியே மரைக்கார் தீவாகும்.
1990ஆம் ஆண்டு மன்னரிலிருந்து புலிகளினால் முஸ்லிம்கள் விரட்டப்பட்டவேளை 65 குடும்பங்கள் இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு வெளியேறியவர்கள் தற்போது 270 குடும்பங்களாக இருக்கின்ற நிலையில் அவர்கள் தாம் வாழ்ந்த பூர்வீக பிரதேசங்களில் மீளக்குடியேறுவதற்கான காணிகளைப் பெற்றுக் கொள்ளுதல் பெரும் போராட்டமாக மாறியுள்ளது.
இந்த 270 குடும்பங்களில் 150 குடும்பங்களுக்கான காணிகள் இன்னமும் வழங்கப்படாத நிலையில் கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி இம்மக்கள் தமக்குத் தீர்வு பெற்றுத் தருமாறு கூறி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை நேரில்கண்டறிவதற்காகவே நல்லாட்சிக்கான தேசிய முன்னனியினர் இன்று அங்கு சென்றிருந்தனர். இப்பிரதேச மக்களுடனான நீண்ட நேர சந்திப்பொன்றும் அங்கு மேற்கொள்ளப்பட்டது.
இச்சந்திப்பின்போது பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கையில்...
'நங்கள் இப்பிரதேசத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவருகின்றோம். யுத்த காலத்தில் அகதிகளாகவெளியேற்றப்பட்ட நாம் யுத்தத்தின் பின்பு எமக்குப் புது வாழ்வுகிடைக்குமென்ற நம்பிக்கையோடு காத்திருந்தோம்.
ஆனால் அந்த நம்பிக்கை இப்போது வீண் போயுள்ளது.எம்மிடம் உறுதிப்பத்திரமுள்ள நாங்கள் பரம்பரைபரம்பரையாக வாழ்ந்து வந்த 250 ஏக்கருக்கும் அதிகமானகாணிப்பரப்புகளை கடப்படையினர் கையகப்படுத்தி தமதுகட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இதில் தாம் மையவாடியாகப் பாவித்து வந்த 10 ஏக்கர் காணியும் அடங்கு கின்றது. இதனால் 150 குடும்பங்கள் நடுத்தெருவில்நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எமக்கு மாற்று நிலங்களைத் தருவதாக வாக்குறுதியளித்தஅரசாங்க அமைச்சர்களும், அதிகாரிகளும் எமக்குச்சொந்தமான பூர்வீக இடங்களிலிருந்து மூன்றுகிலோமீட்டருக்கு அப்பாலுள்ள ஒரு காட்டுப்பிரதேசத்தைகாட்டி அதனைத் துப்பரவு செய்து எடுத்துக் கொள்ளுமாறுகூறினர். ஏறத்தாள 3 இலட்சம் ரூபாய்கள் செலவளித்து அதனை நாம் துப்பரவு செய்து கொண்டிருந்த வேளை இராணுவத்தினர் அங்கு வந்து அது தம்முடைய பிரதேசம்எனக்கூறி எம்மை விரட்டிவிட்டனர்.
அதன் பின்னரே நாம் இந்தப்பகுதிக்கு வந்து கொட்டில்களை அமைத்துக்கொண்டு மிகுந்த சிரமத்தோடு நாட்களைக் கடத்தி வருகிறோம்.
இப்போது இது வனவிலங்கு இலாக்காவிற்குரியது எனக் கூறிஇங்கிருந்தும் எம்மைச் செல்லுமாறும் வலியுறுத்துகின்றனர்.அரசாங்க சட்ட விதிகளின்படி சொந்த நிலமல்லாமல் மீளக்குடியேறும் மக்களுக்கு குடும்பத்திற்கு தலா அரை ஏக்கர் வீதம்காணிகளை அரசாங்கம் வழங்க வேண்டும். எமது சொந்தக்காணிகளை கடற்படையினரிடம் இழந்துள்ள நாங்கள்இப்பகுதியில் குடும்பத்திற்கு தலா 30 பேர்ச் காணியைமாத்திரமே எடுத்துக் கொண்டுள்ளோம். விடுதலை புலிகளால்அகதிகளாக்கப்பட்ட நாங்கள் இன்று அரசாங்கத்தினால்அனாதரவாக்கப்பட்டுள்ளோம்.
எமக்கு நீதி வழங்குமாறு கூறி கடந்த மாதம் 9ஆம் திகதி பலமணித்தியாளங்களாக கவனயீர்ப்பு போரட்டமொன்றை மேற்கொண்டோம். எமக்கு தீர்வு பெற்றுத் தரத்தக்க அதிகாரம் கொண்ட அமைச்சர்களோ, அதிகாரிகளோ எம்மை இதுவரைவந்து பார்க்கவில்லை. அந்த வகையில் இன்று எம்மை பார்ப்பதற்காக நீங்கள் வந்திருப்பது எமக்கு பெரும் ஆறுதல்அளிக்கிறது.
எமது சொந்தக் காணிகளை ஆக்கிரமத்துக் கொண்டுள்ள படையினர் இந்த உப்பாறிலும் தாம் மீன் பிடிப்பதற்குத் தடைவிதித்துள்ளனர். இது எமது வாழ்வாதாரத்தை நசுக்கியுள்ளது.
எமது பிரச்சனைகளை நீங்களாவது உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று நீதி பெற்றுத்தர வேண்டுமென்று எதிர்பார்கின்றோம்' என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இப்பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான சகல உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக தெரிவித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னனி பிரதிநிதிகள் வடமாகாண சபையின் கவனத்திற்கும் இப்பிரச்சினையை கொண்டு செல்வதாக உறுதியளித்தனர்.
அத்தோடு மத்திய அரசாங்க அமைச்சர்களோடும் தொடர்புகொண்டு இம்மக்களுக்கான தீர்வுகளை விரைவாகப்பெற்றுக்கொள்வதற்கான பங்களிப்பினைச் செய்வதாகவும்உறுதியளித்தனர்.
இக்கலந்துரையாடல் முடியும் தருனத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களும் அங்கு வருகை தந்தார். இப்பிரச்சினை தொடர்பில் தானும் ஏற்கனவே நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் இவ்விடயத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனியினர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை தான் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னனி இவ்விடயம் தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒருங்கினைப்பதற்கென இப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்றும் இக்கலந்துரையாடலின் இறுதியில் நியமிக்கப்பட்டது.
Post a Comment