Header Ads



புத்தபெருமானின் கொள்கைகளை பின்பற்றும் நாட்டில் விஸ்வரூபமெடுக்கும் விபசாரம்

(ஹுஸ்னா)

புத்தபெருமானின் பஞ்சசீலக் கொள்கைகளை பின்பற்றும் நாடென பௌத்தர்கள் பெருமையடித்துக் கொள்ளும் எமது நாட்டில் விபசாரம், ஓரினச் சேர்க்கை, சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவு, சூதாட்டம் என்ற பஞ்ச கொள்கைகளே பின்பற்றப்படுகின்ற தோற்றப்பாட்டை அண்மைக்கால தரவுகள், நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. 2கோடி மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், கணக்கெடுப்பின்படி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலை மாதர்களும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களும், 30 முதல் 40 ஆயிரத்திற்கிடைப்பட்ட சிறுவர் பாலியல் தொழிலாளர்களும் இருக்கின்றார்கள் என்பதை அறியும்போது, இன்னும் சில வருடங்களில் எமது நாடு தாய்லாந்தின் இடத்தையெட்டி விடுமென்ற அச்சமே ஏற்படுகின்றது. 

இலங்கையைப் பொறுத்தவரை விபசாரம் சட்டப்படி குற்றம், ஓரினச் சேர்க்கை தொடர்பில் சட்டத்தில் ஏதாவது இருக்கின்றதா என்பது தொடர்பில் குழப்ப நிலை. ஏனெனில், எமது நாட்டில் முக்கிய நகரங்களில் குறிப்பாக தலைநகரை அண்டிய பகுதிகளில் ஓரினச்சேர்க்கையாளர் சங்கங்கள், அமைப்புகள் சுதந்திரமாக செயற்படுவதுடன், இந்த நாட்டின் பிரபலங்கள் பலரும் அதில் தலைமைப் பதவிகளிலும், அங்கத்தவர்களாகவும் உள்ளனர். இவர்கள் தொடர்பில் சட்டம் இன்னும் பாயாததே இந்தக் குழப்ப நிலைக்கு காரணம். எமது நாட்டைப் பொறுத்தவரையில் விபசாரமே இன்று புற்றுநோயாக அரித்து கொண்டிருக்கிறது. முன்னர் அங்கொன்றும், இங்கொன்றுமாக காணப்பட்ட விலைமாதர்கள், இன்று தொழில் நிறுவனங்களைப் போல் நிர்வாக கட்டமைப்புடன் செயற்பட்டு வருகின்றனர். பாரியதொரு தொழிலாக உருவெடுத்துள்ள விபசாரத்தின் பின்னணியில் அரசியல்பலமும், பணபலமும் இருப்பதுடன், பொலிஸ் பாதுகாப்பும் இருப்பது ஒன்றும் ரகசியமான விடயமல்ல. சில நேர்மையான பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறான விபசார தொழில் நிலையங்கள் மீதோ அல்லது விலை மாதர்கள் மீதோ நடவடிக்கை எடுத்தால், அவர்களுக்கு கிடைப்பது பட்டங்களோ, பதவிகளோ அல்ல. மாறாக இடமாற்றங்களுக்கும், பழிவாங்கல்களுக்குமே உள்ளாகின்றனர். 

அந்தளவுக்கு இன்று விபசாரமும் விலை மாதர்களும் சக்தியுள்ளவர்களாக காணப்படுகின்றனர். இலங்கையில் விபசாரம் இரண்டு வகைப்படும். ஒன்று தாமாக விரும்பி இத்தொழிலில் ஈடுபடுவது. இரண்டாவது கட்டாயத்தின் பேரில் ஈடுபடுத்தப்படுவது. இந்த முதலாவது வகையில் பாடசாலை மாணவிகள் முதல், ஆடம்பரத்தை விரும்பும் குடும்பப் பெண்கள் வரை உள்ளடங்குகின்றனர். இரண்டாவதில் வறுமையின் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். விபசாரம் பொருளாதார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே காணப்படுகின்றது. இதில் அதிகளவான பெண்களை வறுமைதான் விபசாரத்தின் பக்கம் கொண்டு செல்கின்றது. இதற்கு விபசாரத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தில் உள்ள பலவீனமும் காரணமாகின்றது. வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இந்த விபசாரத் தொழில்சார்ந்த பெண்கள் தான் அதிகமாக சீரழிக்கப்பட்டு வருகின்றனர். ஏனெனில், அவர்களின் உடல்தான் இந்தத் தொழிலின் மூலதனம். முன்னைய காலங்களில் ஆண்களின் கட்டுப்பாட்டில் நடந்து வந்த இந்தத்தொழில் இன்று பெரும்பாலும் பெண்களின் கட்டுப்பாட்டிலும், வழிநடத்தலிலும் இடம்பெறுவதுதான் கொடுமை. அதிலும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிமாக ஈடுபட்டு வந்த இத்தொழிலில் இன்று 14வயது சிறுமிகள் கூட அதிகளவில் ஈடுபடுத்தப்படுவது  தான் மகாகொடுமை. சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபட வைப்பதற்கு சுற்றுலாத்துறை பிரதான பங்கு வகிக்கின்றது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குறைந்த செலவில் நிறைந்த சுகம் காணவே எமது நாட்டை நோக்கி அதிகம் வருகின்றனர். 

இவர்களில் அநேகர் உடல் சுகத்திற்காக சிறுமிகளை நாடுவோராகவும், ஓரினச் சேர்க்கையாளர்களாகவும் உள்ளனர். இவ்வாறான கீழ்த்தரமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கென்றே சுற்றுலாத்தலங்களை அண்மித்த பகுதிகளில் பல குழுக்கள் இரவு, பகலாக செயற்படுகின்றன. இக்குழுக்களினாலேயே சிறுமிகளும், சிறுவர்களும் விபசாரத்தினுள் தள்ளப்படுகின்றனர். கலாசாரத்திற்கும், கட்டுக் கோப்புக்கும் பெயர் பெற்ற வடக்கு, கிழக்கில் கூட இன்று விபசாரமும், விலைமாதர்களும் அதிகரித்து வருகின்றனர். இதற்கு அங்கு நடந்த போரும், விதவைப் பெண்களின் வறுமையுமே காரணங்களெனக் கூறப்படுகின்றது. ஆனாலும், அங்கு விலைமாதர்களாக இருப்பவர்கள் அனைவரும் விதவைகள் என்றோ அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றோ கூறமுடியாது. வடக்கில் யுத்தம், முடிவடைந்த நிலையில், அபிவிருத்தி என்ற பெயரில் அப்பகுதியின் கலாசாரம், பண்பாடுகளை அழிக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக தென்பகுதிகளைச் சேர்ந்த பல விலைமாதர்கள் வடக்கில் சுதந்திரமாக தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதனை மூடி மறைத்து, வடக்கு பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஒரு கீழ்த்தரமான பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. 

ஆனால், தென்பகுதியைப் பொறுத்த வரையில் பெரும்பான்மையின விலைமாதர்களுடன் வடக்கு, கிழக்கு, மலையகத்தைச் சேர்ந்த பெண்கள் சிலரும் விபசாரத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸார் அண்மையில் மருதானைப் பகுதியில் விபசார நிலையமொன்றை சுற்றிவளைத்த போது அதில் கைதான 5 பெண்களில் இருவர் கிழக்கு மாகாணத்தையும், ஒருவர் வடமாகாணத்தையும் சேர்ந்தவராக இருந்தனர். இதேபோன்று இன்னும் சில இடங்களில் நடந்த பொலிஸாரின் சுற்றி வளைப்புகளிலும் இவ்வாறு மலையகப்பகுதி வட, கிழக்கைச் சேர்ந்தோர் கைது செய்யப்பட்டிருந்தனர். தென்பகுதியை பொறுத்தவரையில், மசாஜ் நிலையங்கள், ஆயுர்வேத நிலையங்கள் என்ற பெயர்களில் இயங்கும் இடங்களிலேயே விபசாரத் தொழில் அதிகளவு இடம்பெறுகின்றது. இதுமட்டுமின்றி, உல்லாச ஹோட்டல்களில் கூட விலைமாதர்கள் பல பேர் உள்ளனர். விபசாரத் தொழில் இடம்பெறும் சிறு சிறு இடங்களை சுற்றிவளைத்து விலைமாதர்களை கைது செய்யும் பொலிஸாரால் இவ்வாறான ஹோட்டல்களை நெருங்கக்கூட முடியாது. ஏனெனில், அவை அரசியல் பின்னணி கொண்டதாக அல்லது அரசியல் செல்வாக்கு கொண்ட ஹோட்டலாக இருக்கின்றன. இலங்கை சட்டத்தில் விபசாரம் தொடர்பில் பழையகால விதிகளே காணப்படுகின்றன. 

இதற்கு ஒரு உதாரணத்தை கூற முடியும். கொள்ளுப்பிட்டிப் பகுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவரை கைதுசெய்த பொலிஸார் அவரை தகுந்த ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, அவருக்கு நீதிமன்றம் தண்டப்பணமாக பத்து ரூபாவை மட்டும் விதித்து விடுவித்தது. ஏனெனில், இலங்கைச் சட்டத்தில் விபசாரம் தொடர்பில் அந்தக்கால நடைமுறையே பின்பற்றப்படுகின்றது.  அதனாலேயே அந்த வெளிநாட்டு விலை மாதுக்கு 10 ரூபா தண்டமாக விதிக்கப்பட்டது. 10ரூபா இருந்தால் இலங்கையில் விபசாரம் செய்யலாம் என்ற நிலையை இது ஏற்படுத்தியதால், இச்சட்டம் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதேவேளை, இலங்கையிலுள்ள விலைமாதர்களின் எண்ணிக்கை, விபசாரத்தில் ஈடுபடுவதற்கான காரணங்கள், எந்த மாவட்டத்தில் அதிகமாக இடம்பெறுகின்றன. கட்டுப்படுத்துவதற்கான வழி என்ன என்பன போன்ற கேள்விகளை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாநேரத்தில், ஐக்கிய தேசியக்கட்சியின் அநுராதபுரம் மாவட்ட எம்.பி.ஹரிசன், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் இவ்விடயம் தொடர்பில், அரசு எந்தளவுக்கு அசட்டையாக செயற்படுகின்றது என்பதை எடுத்துக்காட்டியது.  

இலங்கையிலுள்ள விலை மாதர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில் விலைமாதர்களை தேடிப்பிடித்து எண்ணிக் கொண்டிருப்பது எனது வேலையல்ல. அதற்கு எனக்கு நேரமும் இல்லை. முடிந்தால் நீங்கள் எண்ணிச் சொல்லுங்கள். எந்த மாவட்டத்தில் அதிகம் இடம்பெறுகின்றதென்ற கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அநுராதபுரம் மாவட்டத்தில்  தான். அதனால் நீங்கள் மனதுவைத்தால் விலை மாதர்களை குறைக்க முடியும். இதற்கு ஹரிசன் எம்.பி.அமைச்சரே, நான் விலை மாதர்களிடம் போகிறவன் அல்ல என்ற போது, நானும் அப்படிப்பட்டவன் அல்ல. ஆனால், அப்படியானவர்களும் இங்கு இருக்கின்றார்கள். எனவே, இவ்வாறானவர்கள் விலைமாதர்களிடம் செல்வதை நிறுத்தினால் அவர்களின் எண்ணிக்கையும் குறையும். எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையும். அதனைவிடுத்து விலை மாதர்களை தேடிப் போகின்றவர்களையோ விபசாரத்தில் ஈடுபடுகின்றவர்களையோ, சட்டம்போட்டு தடுக்க முடியாது என அமைச்சர் பதிலளித்தார். 

இதேநேரம், இலங்கையில் விபசாரத்தொழில் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் தான் அரசு, கஸினோக்களுக்கு (சூதாட்ட நிலையங்களுக்கு) சட்ட அங்கீகாரம் வழங்க முடிவெடுத்தது பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. கஸினோக்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கினால் விபசாரத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டதாகி விடுமென கடும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. கஸினோக்கள் சட்ட அங்கீகாரத்துடன் இயங்கத் தொடங்கினால், விபசாரத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து விடுமென்றும் பலாத்காரமாகக் கூட பலர் விபசாரத்தில் தள்ளப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்படும் அதேவேளை, விபசாரத்திற்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கிவிட்டால் நாட்டில் இடம்பெறும் பாலியல் வல்லுறவுகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறையுமென குரல் கொடுக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், விபசாரம் இலங்கைச் சட்டத்தில் குற்றமாகக் காணப்படினும், அத்தொழில் சட்ட அங்கீகாரத்துடன் நடப்பது போன்றே பகிரங்கமாகவும், பரபரப்பாகவும் இடம்பெற்று வருகின்றது. நம்நாட்டுப் பெண்கள் மட்டுமின்றி, ஜப்பான், தாய்லாந்து, சீனா, ரஷ்யா, உக்ரைன்,  இந்தியா, பிலிப்பைன்ஸ், கொரியா நாட்டு பெண்கள் கூட இங்கு வந்து விபசாரத்தில் ஈடுபடுகின்றனர். வெளிநாடுகளில் விபசாரம் சட்ட பூர்வமானதாக்கப்பட்டுள்ளது. 

அதனால் அங்கு பெண்கள் மீதான குற்றங்கள் குறைவு. அதேபோன்று இலங்கையிலும் விபசாரத்தை சட்ட பூர்வமாக்கலாம் தானே எனக் கூறுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். எமது நாட்டின் ஆதார சக்தியே குடும்பங்கள் தான். விபசாரம் அனுமதிக்கப்பட்ட நாடுகளின் குடும்ப உறவுகளை கொஞ்சம் சீர்தூக்கிப் பார்த்தால், அப்போது தெரியும் எமது நாட்டின் சிறப்பு. விபசாரம் எமது நாட்டில் அங்கீகரிக்கப்பட்டால், ஏழ்மையில் சிக்கியிருக்கும் பெண்கள் விபசாரத்தில் தள்ளப்படுவார்கள். விபசாரத்தின் மூலம் கிடைக்கக்கூடிய அபரிதமான வருமானத்திற்காக சிறுவயதிலேயே பெண் குழந்தைகள் விபசார சந்தையில் விற்கப்படுவார்கள். குடும்ப அமைப்பே சீர்குலைந்து விடும். எனவே, எமது நாட்டுக்கு இன்றைய அவசரத்தேவை விபசாரத்தை ஒழிக்கக் கூடிய மிகக்கடுமையான சட்டங்களே. அத்துடன், பெண்களுக்கு எதிரான குற்றவாளிகள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும். சிறுவர், மகளிர் விவகார அமைச்சுக்கு பெண் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும். கஸினோவுக்கு சட்டபூர்வ அனுமதி வழங்குவது நிறுத்தப்பட வேண்டும். பெண்கள், சிறுவர்களின் விடயங்களை கையாளவென பெண் உயரதிகாரிகளைக் கொண்ட தனிப் பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட வேண்டும். இல்லாது விட்டால், விபசாரத்தினால் நாம் ஆசியாவின் அசிங்கமாகி விடுவோம்.

No comments

Powered by Blogger.